இரயிலிருக்கை விடு தூது

காப்பு 

கன்னியைக் கண்டதும் காதலென எண்ணுகின்ற 
என்றன் பதின்ம எழில்வயதில் - அன்றொருநாள் 
நான்செய்த ஓர்குறும்பை நன்றாகப் பாடுகிறேன்
ஊன்செய்தான் காக்க உவந்து!

புதுமை 

செல்வதையே தூதாய்ச் செலுத்திடுவார், என்றாலும் 
செல்வதெலாம் வெல்லத்தான் சென்றிடுமோ? - சொல்லுகின்ற 
தூதைத் திறம்படவே சொல்வதுவே நற்றூதாம்! 
ஈதை உணர்ந்திடுவீ ரிங்கு! 

நூல் 

ஓடும் இரயிலில் உட்கார்ந்து கொண்டுயான் 
பாடிக் கவிதைப் பரவசத்தில் - ஈடில்லாக் 

கற்பனைக் காட்டிடைக் கண்டுயிலும் நேரத்தில் 
விற்புரு வத்தாள் விசைகணைகள் - அற்புதமாய் 

வீசும் விழியுடையாள்! விந்தையே தன்னுருவாய்ப்
பேசும் திறத்திலே பெண்ணொருத்தி - கூசுங் 

கழுத்தோரம் தொட்டுக் கனவுலகை நீக்கி 
"எழுந்திருங்கள் ஈதென் இடமென்" - றெழில்மொழிந்தாள்! 

பேச்சில் மயங்கியான் பேசாமல் நின்றுபின்னர் 
காய்ச்சல் தெளிந்திடத்தைக் கண்டுகொண்டு - மூச்சில்லாப்

பொம்மைபோல் அன்னாள் பொலியும் முகத்தழகில் 
செம்மை உடலில் செழிப்பினிலும் - அம்மங்கை 

கொண்ட குரலினிலும் கொள்கை மறந்தவனாய் 
விண்டவாய் மூடா விசித்திரனாய்க் - கண்டிருந்தேன்! 

என்றன் இருக்கைக் கெதிர்ரமர்ந்தாள்! ஆகாகா 
அன்றென்றன் ஆர்மோண்கள் ஆட்டத்தை - என்சொல்வேன்? 

பார்வையிலே அன்னவளைப் பாதியெனத் தின்றுவிடும் 
ஆர்வத்தில் கண்டிருந் தாழ்ந்திருந்தேன்! - போர்வித்தை 

நன்கறிந்த கண்ணாள் நயனத்தில் அம்பெய்து 
மன்மதனைக் கூப்பிடும் மங்கையவள்! - முன்னிருந்த 

மேனியெழில் சொல்லி மெதுவாகப் பேசுகிறேன்!
தேனிருப்பை மெல்லுதட்டில் தேடியே - வானிருக்கும் 

புள்ளும் குழவிகளும் பூச்சித்தேன் ஈக்களும்
துள்ளிப் பறந்து துவண்டிருக்கும் - கொள்ளைமர்ம

முக்கோணக் காந்தமது மூக்கென் றிலங்கிநிற்கும்!
அக்கோணம் பெற்ற அழகெழுத - எக்கவியும் 

மண்ணிற் பிறக்கவில்லை மன்னுகின்ற இவ்வெழில்கள் 
கண்ட மயக்கத்தில் கத்திநின்றேன் -பெண்ணவளோ

நெஞ்சக் குழிக்குள்ளே நேராத அற்புதத்தைக் 
கொஞ்சும் ஒருவிழியில் கொண்டுதந்தாள்! - மஞ்சக் 

கலைபழக என்றன் கனவினிலே நின்றாள்! 
அலைகடலில் கைசேர்ந் தணைத்தாள் - மலையெனவே 

அவ்வேளை தூக்கம் அழைத்திடவே கண்மூடி 
செவ்விளமைப் பெண்ணோடு சேர்வதுபோல் - கொவ்வைச் 

சிவப்பிதழ் உண்டு சிலிர்ப்பதுபோ லெல்லாம் 
உவந்து கனவுகண்டே உய்தேன் - கவிக்கனவு 

நின்று முடிந்த நிமிடத்தில் நானெழுந்தேன்!
கன்னி மறைந்துவிட்டாள் காலியிடம் - நின்றதங்கே! 

அன்றுவந் தங்கே அழகுபடத் தோன்றியே
நின்றவளை என்னென்று நீட்டிடுவேன் - மென்னகையாய்

வந்து மனத்தில் வசந்தம் பரப்பியபூ 
அந்த இடத்தில் அருகிலில்லை - இந்தசேதி 

ஓர்ந்த மனத்தில் ஒருகோடி மின்னலிடி 
நேர்ந்துவந் தென்னை நெருக்குயொலி - ஆர்த்திருக்கும்

காட்சியினைக் கண்கொண்டு காண்பதுவுஞ் சாத்தியமோ ? 
மீட்சிபெற உள்ளம் மிரண்டிடவே - நீட்சியுறும் 

கோலங்கள் சொல்லவொணாக் கோரங்கள் அத்தனையும் 
பாலகனைப் பாடாய்ப் பலிக்கேட்கும் - ஓலமெலாம் 

நீங்கி எனதுள்ளம் நித்ய அமைதிபெற 
ஏங்கி ஒருவழியை என்மூளை - தாங்கியதால் 

நின்னையோர் தூதாய் நிகழ்த்துகிறேன் நீசென்றே
என்சேதி தாங்கி எழிலாகக் - கன்னியவள் 

நான்கண்ட காட்சி நனிக்கன வெல்லாமுந் 
தான்கண்டு கொள்ளும் தரம்செய்வாய் ! - "ஏனிங்கே 

செல்லும் பொருளிருக்கச் செல்லாம லோரிடத்தே 
வல்லவனா மென்னை வளைக்கின்றாய் - சொல்லுகென்றால்"

பெட்டிகள் மாறலாம் பேரிரயில் மாறிடலாம் 
இட்டிருக்கும் நல்ல இருக்கையே - ஒட்டிநீ 

எங்கும் நகரா திருக்கும் திறன்கொண்டாய்! 
தங்கியென் தூதைத் தரமாக - இங்குரைப்பாய்! 

தென்றல் அவளைத்தான் தேடி அலையாது!
மன்ற நிலவுவந்து மண்ணுக்குள் - ஒன்றாது! 

கிள்ளை பழம்தேடும் கின்னரங்கள் கூச்சலிடும் 
பிள்ளையென் சோகம் பிதற்றாது! - துள்ளுகின்ற 

சேடி எனக்கில்லை சேர்வதெலாம் அப்பெண்ணே!
ஓடும் நதிதூ துரைக்காது - கூடிப்

பிரிந்ததண்ட வாளங்கள் பின்னவளைக் கண்டு 
விரித்தென்றன் சேதி விளம்பா - துரிமைக்

கவிதையது சென்றாலும் கன்னி அறியாள்!
தவமிருக்கும் கொக்கும் தடைதான்! - இவையெல்லாம் 

செய்ய முடியாத செய்தற் கரியவினை 
ஐய! முடிப்பாய் அதையறிவேன் - பைய 

இருந்தவிடத் தேயிருந் தின்பமொழிப் பெண்ணாள்
வரும்பொழுதைப் பார்த்து வளமாய் - ஒருதவந்தான் 

மேற்கொள்வாய் மீண்டும் மெலிவிடையாள் வந்துவிட்டால் 
ஏற்றுன்னில் அன்போ டிருத்திவைத்து - நேற்றொருநாள் 

உன்னிருக்கை தன்னில் உறங்கிக் கிடந்திட்ட 
மன்மதனை ஒத்த மனத்தழகன் - என்னிடமோர் 

சேதிசொன்னான் நானதனைச் செப்பிடுவேன் என்றுரைத்து 
வாதிடா துன்மேல்நான் வார்க்கின்ற - தீதிலா 

என்றன் தொலைப்பேசி எண்களைக் காட்டிநீ 
உன்னிலவள் எண்வாங்கி வை!  

-விவேக்பாரதி 
22.05.2017

Comments

Popular Posts