என்னைப் பிரியாத சிவம்


என்னைப் பிரியாதிரு - சிவமே
    என்னைப் பிரியாதிரு
நின்னைச் சிரமேற்றினேன் - சிவமே
    நின்மேல் தவமேற்றினேன்!

அறிவோடும் மனத்தோடும் உறவாடிடு் - என்
    ஆன்மாவின் வித்துக்குள் கருவாகிடு
நெறிகாட்டி உயர்வூட்டி நிலையாயிரு - நிதம்
    நிஜமாகி எந்நெஞ்சில் கலையாதிரு! (என்னைப்)

கதிதேடி அலைகின்ற கருமேகமாய் - உன்
    கழல்தேடும் எனைத்தாங்கும் சுவராயிரு!
நதிபோலே செல்கின்ற என்வாழ்க்கையில் - கடல்
    நலமாக நிலமாக நீசேர்ந்திடு! (என்னைப்)

உயர்ஞானம் தவயோகம் மதிசேர்க்கிலேன் - சிறு
    உடல்காக்கும் மருந்தாகும் நிலைகாண்கிலேன்!
அயர்வாகும் பொழுதெங்கும் எனைத்தாங்கியே - என்
    அடிநெஞ்சில் உன்கோயில் சுடரேற்றிடு! (என்னைப்)

அழிந்தோடும் நேரங்கள் இனிவேண்டிடேன் - என்
    அவதாரப் பயனென்ன நீசொல்லிடு!
பழியோடும் புகழோடும் உழலாமலே - உன்
    பதம்சேர்ந்து விதிதீர்த்து எனைப்புல்லிடு! (என்னைப்)

-விவேக்பாரதி

07.09.2017

Comments

Popular Posts