ஞானச் சிறுவர்
கடையத்தில் பாரதி தேசியக் கல்வி மாணவர்கள் கேட்க, எழுதிய பாடல்...
முன்னால் வரவேணும் தம்பி - வெற்றி
முயற்சி செய்வதை நம்பி!
உன்னால் முடிந்தவினை செய்து - இந்த
உலகை உயர்த்திவிடு தம்பி!
டீவியில் மூழ்குதல் விட்டு - வெளி
திரிந்து விளையாட வேணும்!
ஓவியம் வரைந்திட வேணும் - நல்
ஒழுக்கம் கற்றிட வேணும்!
அன்னையும் தந்தையும் தெய்வம் - நல்ல
ஆசிரியர் உயர்த் தெய்வம்
நண்பர்கள் தோள்தரும் தெய்வம் - அட
நானும் நீயும்கூட தெய்வம்!
கல்வி அடைவது கடமை! - அதைக்
கற்றும் கொடுப்பதுன் திறமை!
சொல்லில் உண்மைவர வேணும்! - பிறர்
சொற்களைக் கேட்கவும் வேணும்!
நாட்டை வணங்குதலும் வேணும் - அதில்
நல்லவனாய் வாழ வேணும்!
ஆட்டு மந்தைகளைப் போலே - தெளி
வற்றுத் திரிதல் மிகப்பாவம்!
எழுதிப் பழகிடவும் வேணும் - நெஞ்சில்
என்றும் மகிழ்ச்சி கொள்ள வேணும்!
அழுது புலம்புதலும் குற்றம் - தாய்
அளித்த மொழிமறத்தல் குற்றம்!
அச்சப் படுவதுவும் குற்றம் - யார்க்கும்
அடங்காது இருப்பதுவும் குற்றம்!
துச்சம் எனவெண்ணிப் பிறர்க்கு - நீ
துன்பம் இழைத்தல் பெருங்குற்றம்!
சுட்டிக் குறைசொல்லல் குற்றம் - ஒன்று
சுட்ட மூன்று நமைச் சுட்டும்!
குட்டிக் குறும்புகளும் இன்பம் - அதில்
குணங்கள் பழகுவதும் இன்பம்!
யார்க்கும் நல்ல உயிராகி - நீ
யாண்டும் செயல்படுதல் வேணும்!
வேர்க்குள் நீர் துயில்வதைப் போல் - கல்வி
வேட்கை உளம்நிறைய வேணும்!
தேசம், தெய்வம் சமம் தம்பி! - என்றும்
தேம்பா திருந்திடுதல் யோகம்!
ஆசை அளவுடனே கொண்டு - கன
வாழப் பட்டுயர்ந்து வாழ்க!!
-விவேக்பாரதி
21.12.2017
Comments
Post a Comment