பிறந்தநாள் வேண்டுதல்

வாழ்த்துக்கள் சூழ்கின்ற வாழ்க்கை வேண்டும்! சக்தி
       வாழ்கின்ற நெஞ்சு வேண்டும்!
   வாசத்தில் குன்றாத செந்தமிழ்ப் பூவென்னுள்
       வந்து பூத்தாட வேண்டும்!
வீழ்கின்ற வேளையில் வந்தென்னைத் தாங்கிடும்
       வீரரின் உறவு வேண்டும்!
   வீணாக ஒருநாளும் கழியாது பொழுதெலாம்
       வித்தகம் செய்ய வேண்டும்!

நீள்கின்ற நாட்களின் நெளிவிலே மூழ்காமல்
       நீந்திடும் கல்வி வேண்டும்!
   நினைவெலாம் நிறைவெலாம் எந்நாளும் வையத்தின்
       நீடுபுகழ் பாட வேண்டும்!
ஆள்கின்ற தெய்வத்தின் அருளாசியாய்க் கவிதை
       அகத்திலே கொட்ட வேண்டும்!
   அன்பர்க்கும் வம்பர்க்கும் நல்லதே எண்ணிடும்
       அற்புதச் சிந்தை வேண்டும்!

கண்ணிலே காந்தியும் நெஞ்சிலே வீரமும்
       கருத்திலே நேர்மை அருளும்!
   கவிதையில் விடுதலை கண்டிடும் எண்ணமும்
        காழ்ப்பிலா மனமும் வேண்டும்!
விண்ணையும் மண்ணையும் காத்திடும் மாகாளி
         வீரை நின் பாதம் வேண்டி
   வித்தக இளங்கவி கேட்கிறேன் நின்மடி
         வீற்றிடச் செய்வை நீயே!!

-விவேக்பாரதி
22.10.2017

Comments

Popular Posts