சொர்க்க வாசம்
நேற்றிரவு தூங்க விடாமல் போக்கு காட்டி ஒரு வழியாக காலையில் மலர்ந்த ஒரு உணர்வுப் பிரவாகம்.
காளியைத் துணைக்கழைத்துக் காட்சியை அமைக்கவைத்துக்
கவிதை செய்யக் காத்திருக்கிறேன்- அவள்
கண்டு கண்டு பரிகசிக்கிறாள்! - மனத்
தூளியை அசைத்துவிட்டுத் தூங்குமென்னைக் கிள்ளிவிட்டுத்
தூரம் நின்றபடி சிரிக்கிறாள் - என்
துன்பம் சோர்வினை மிதிக்கிறாள்!
நீளுமிக் கணத்திலென்னை நெஞ்சமே அமர்த்திக்கொண்டு
நீலியூழிக் கூத்திசைக்கிறாள் - என்றன்
நினைவெலாம் அவள் வசிக்கிறாள்! - தங்கத்
தோளிலே இருக்கைதந்து தோய்வெலாம் முடிப்பதென்று
தோன்றிவந்தவள் நடிக்கிறாள் - திசை
தோறுமின்னிசை படிக்கிறாள்!
அண்மையில் நெருங்கி வந்து அக்கரைக் குயர்ந்து தாவி
அன்னை சக்தி போக்குசெய்கிறாள் - நின்று
ஆவி யுள்ளில் வாக்கு செய்கிறாள்! - காணும்
உண்மையில் ஜொலிக்கும்சக்தி உணர்வெலாம் இனிக்கும்சக்தி
உச்சி கோதி எனையணைக்கிறாள்! - கொஞ்சம்
உழல விட்ட பின்பிணைக்கிறாள்!
நீரில்வான் நெருப்பு காற்று நிலத்திலே திளைக்கும் ஆதி
நித்தநித்தம் நமை அசைக்கிறாள்! - நம்
நரம்பிலேறிச் சுரமிசைக்கிறாள் - அந்தக்
காரிலே வெடித்துவந்து கடலிலே கலந்துபின்னும்
கரியமேக மாய்த்திரள்பவள்! - தன்
கடமையாக்க நமைவிடுக்கிறாள்!
இசையினோ டின்பவெள்ள அசைவெலாம் சமைக்குமன்னை
ஆடுங்கூத்தை உள்ளில் காண்கிறோம் - அந்த
அனுபவத்தில் ஞானம் பூண்கிறோம்! - சூழும்
விசையெலாம் நமக்குவாய்க்கும் விடையெலாம் அருட்கடம்ப
வாசினியின் ஆசியென்கிறோம் - அதன்
வாசனையே சொர்க்கமென்கிறோம்!!
-விவேக்பாரதி
10.12.2017
Comments
Post a Comment