மாணுடைய சக்தி
வானிருக்கும் சொர்க்கபதி வாசம் - அன்னை
வண்ணமடி கொண்டிருக்கும் வாசம்
தேனிருக்கும் பூவெனச்சு வாசம் - என்றன்
தேவையெலாம் தீர்ப்பதவள் பாசம்!
ஊனிருக்கும் உள்ளமது நாசம் - அது
உமையம்மை நினைப்பால்ப்ர காசம்!
ஏனிருப்ப தென்னுமெண்ணம் வீசும் - அதை
எத்திப்பயன் காட்டும்சக வாசம்!!
ஓரிடத்தில் அன்னையென நிற்பாள் - மற்
றோரிடத்தில் தோழியென நிற்பாள்
மாரிடத்தில் காதலிபோல் சாய்வாள் - அவள்
மறுகணத்தில் மடிச்சிறுமி யாவாள்
யாரிடத்தும் பேசாத தெல்லாம் - தனி
யாழிசைபோல் என்காதில் சொல்வாள்
போரிடத்தைப் போலூடல் செய்வாள் - அன்னை
போக்கினிலே புதிர்பரப்பி உய்வாள்!!
காணுமிடந் தோறுமவள் தோற்றம் - இசைக்
கவிதையெலாம் காளிகுழல் நாற்றம்!
பூணுமிள நெஞ்சகத்தில் ஆட்டம் - செயும்
புண்யவதி! தந்திடுவாள் ஊட்டம்!
நாணுமழி வோடிவழி நோக்கம் - அதை
நம்பியவர் கண்ணுவந்து பார்க்கும்!
மாணுடைய சக்தியவள் திண்ணம்! - மட
மனமகற்றத் தோன்றுமிந்த எண்ணம்!!
-விவேக்பாரதி
02.12.2017
Comments
Post a Comment