உள்ளப் பாடல்

நினைவே எரிக்காதே - நீ
   நீரென நினைத்திருந்தேன்!
கனவே கரைக்காதே - நீ
   கனலென நினைத்திருந்தேன்!
மனமே துடிக்காதே - உனை
   மண்ணாய்க் கருதுகிறேன்!
வினையே அழுத்தாதே - உன்
   விந்தையை நான் மறந்தேன்!

பொழுதே நெருக்காதே - நீ
   போவாய் என நினைத்தேன்!
அழிவே விலகாதே - உன்மேல்
   ஆசை கொண்டுவந்தேன்!
விழைவே நினைக்காதே - உனை
   வீணெனக் கருதுகின்றேன்!
அழகே அழைக்காதே - நான்
   அழிவதில் உறுதி கொண்டேன்!

மலரே சிரிக்காதே - உன்
   மணம்போல் வாழ்வு கொண்டேன்!
சிலையே முறைக்காதே - நான்
   சீக்கிரம் உனை அடைவேன்!
கலையே தடுக்காதே - நான்
   கவிதையில் வாழ்கின்றேன்!
உலகே மறக்காதே - என்
   உள்ளத்தைப் பாடுகிறேன்!!

-விவேக்பாரதி
17.08.2017

Comments

Popular Posts