சொல்வரை
வந்து வீழும் சொற்க ளுக்கு
வரைய மைக்க முடியுமா? - அவள்
வாழ்த்திச் சேர்க்கும் பாட லுக்கு
மறுப்பு சொல்ல இயலுமா?
சந்த நயமும் துள்ளும் நடையும்
கவிதை வந்து கொட்டவே - அதைச்
சற்று நேரம் கழித்து வரச்
சொல்லு வதுவும் நியாயமா?
மூக்கு வழியில் சுவாசக் காற்று
வந்து வந்து சென்றிடும் - அம்
முயற்சி யோடு கவிதை நேரும்
நிலையை வைத்துப் பார்த்திடில்,
வீச்சில் கூட மூச்சு போல
வீர மாக பாயுமே - அது
விளை யாடித் தலை யாட்டி
விந்தை பலவும் ஆக்குமே!
எந்த நேரம் கவிதை நேரும்
சொல்லு வோர்கள் எங்குளார்? - அதன்
ஏக்க மென்ன நோக்க மென்ன
கண்ட வர்கள் எங்குளார்?
வந்து போகும் மின்னல் கீற்றை
வகைப்ப டுத்த முடியுமா - மனம்
வார்த்தை மழையைச் சிந்து கையில்
கோத்தி டாமல் விடியுமா?
யார்கொ டுக்கும் விந்தை பாட்டு?
யாருக் கேனும் தெரியுமா? - அதை
யாண்டும் வந்து யிர்ப்ப தென்ன
எவரும் சொல்ல முடியுமா?
போர்கொ டுக்கும் புயல்கொ டுக்கும்
புரள வைக்கும் பாடலே - வெளி
போந்து விட்டால் பேறு கண்ட
சுகம்கொடுக்கும் பாடலே !!
வாயெ டுத்துப் பாடப் பாட
வந்த சேரும் பாடலே - பிறர்
வாழ்த்தெ டுத்து ணர்ந்து நோக்க
வாழ்க்கையாகும் வாழ்க்கையே!
தாயெ டுத்து நல்கும் பாடல்
சேயெடுத்துப் பாடுவோம்! - செந்
தமிழெ டுத்துச் சுவையெ டுத்துக்
கவியெடுத்து பாடுவோம்!!
-விவேக்பாரதி
24.07.2017
Comments
Post a Comment