அந்தியெழில்

அந்திமகள் தந்தவொளி அற்புதமாய் வந்தவொளி
    அத்தனையும் முத்துவடம் கோக்குதே! - என்
சிந்தனையில் சந்தவொலி சீவனுளே மந்திரமாய்ச்
    சித்திரமாய்த் தத்திவந்து பூக்குதே!

தென்னையிலும் மஞ்சளொளி திண்ணையிலும் வந்துநடம்
    தந்திடுஞ்ச லங்கையொலி கேட்குதே! - அதன்
முன்னிலையில் பின்னெழிலில் சந்தமெழும் விந்தைதனில்
    முத்துக்கவி பொத்துவரப் பார்க்குதே!

வெண்ணிலவோ வானமதில் வந்துவிளை யாடுவதில்
   வெந்தமனம் தண்ணொளியைக் காணுதே! - இசைப்
பண்ணெனவே செந்திலவன் பாட்டினொலிக் கூட்டமுதம்
    பத்திரமாய் வந்துசெவி ஏறுதே!

கம்பனவன் சிந்துகவி முந்தியென தண்மையிலே
    கந்துகமெ ரிந்துவிளை யாடுதே! - அதில்
செம்புலமைப் பாட்டுநதி சேர்ந்துவிழ லானதடி
    செய்தயிள முள்ளமிதைப் பாடுதே!!

-விவேக்பாரதி

02.09.2017

Comments

Popular Posts