காளிப்பாட்டு களிப்பாட்டு
காளி என்ற சொல்லை - நம்
கருத்தி னுக்குள் வைக்கத்
தோளில் வலிமை சேரும் - எதிலும்
தோன்றும் வெற்றி நேரும்!
நீளும் துன்ப மெல்லாம் - மாய
நினைவ கன்று போகும்
தாளும் வைர மாகும் - மார்பில்
தாயின் வீரம் ஊறும்!!
காளி எனப தென்ன? - உள்ளக்
களிகொ டுக்கும் வார்த்தை
காளி என்ப தென்ன - ஆழக்
கவிகொ டுக்கும் ஆற்றல்
காளி என்ப தென்ன - ஊரில்
கவலை தீர்க்கும் போதை
காளி என்று சொல்ல - நெஞ்சக்
கயமை மாளும் திண்ணம்!
காளி என்று சொல்வோம் - நாளும்
கடமை செய்து வெல்வோம்!
காளி உலக மாவாள் - அவளே
கருவும் உயிரும் ஆவாள்
காளி ஒற்றை ஜோதி - வையம்
கண்டெ டுத்த ஆதி!
காளி நாமம் வாழ்க - நம்மைக்
காளி நிழலும் சூழ்க!!
-விவேக்பாரதி
30.11.2017
Comments
Post a Comment