புத்தாண்டு வாழ்த்து - 2018
வானில் வெடிகள் முழங்கிடவே
வந்தாய் புதிய புத்தாண்டே
தானம் தர்மம் ஆன்மீகம்
தன்மை அறிவின் ஆற்றல்கள்
மானம் உணர்ச்சி எல்லாமும்
மன்னிப் பெருகும் பொழுதுகளை
ஆன மட்டும் தரவேண்டும்
அன்பே வாழும் நிலைவேண்டும்!
உன்னால் உலகோர் இன்புறுவார்
ஊறை விழைவார் துன்புறுவார்
தன்னால் முடிந்த வினைசெய்வோர்
தக்க படிக்கு வரவேற்பார்!
என்போல் இளைஞர் கூத்திடுவார்
ஏழை மக்கள் வலுபெறுவார்!
முன்னால் நிகழ்ந்த பிழையெல்லாம்
மூளா வண்ணம் நீயிருப்பாய்!
இரண்டா யிரத்துப் பதினெட்டே
இதயம் கனிந்த வாழ்த்துனக்கு!
திரண்டாய் வாழ்த்தத் திரள்கின்றோம்
திறமாய் உன்னை மதிக்கின்றோம்!
வரமாய் வருவாய் புத்தாண்டே
வழக்கம் போல வாழ்த்துரைத்துக்
கரங்கள் குலுக்கி மகிழ்கின்றோம்
கவிதை பாடி அழைக்கின்றோம்!
பிறந்தாய் மகிழ்ந்தோம்! வளர்வாய்நீ
பிழைகள் நேராப் பொழுதுகளைச்
சிறப்பாய்த் தருவாய் சீர்தருவாய்
சிரத்தை கொள்ளும் மனம்தருவாய்!
நிறங்கள் பூக்க நீவந்தாய்
நிழலாய் நிலவாய் நீவந்தாய்
அறங்கள் செய்ய மதிதருவாய்
அணைத்து காப்பாய் வருடத்திலே!!
-விவேக்பாரதி
01.01.2018
Comments
Post a Comment