மோகினி ரூபம்
பக்கத்து பெருமாள் கோவிலில் கண்ணன் மோகினியாக வந்திருந்தான்...கவிதையையும் சேர்த்துக் கொண்டு வந்தான்...
மூடிக் கிடக்கும் திரைக்குள்ளே
மோகினி ரூபம் கண்டேன் - அவள்
மூக்குத்தி அழகைக் கண்டேன்!
ஆடிடும் விழிகள் தேனெனும் அதரம்
அலர்ந்து சிரிப்பதைக் கண்டேன் - அது
ஆண்டவன் உருவெனக் கண்டேன்!
வெள்ளுடை தாங்கி வெங்கலச் சிலையாய்
வேணு கோபாலன் வந்தாள் - நான்
வேண்டும் வரங்களைத் தந்தாள்!
வெள்ளி நிலாபோல் பொலிவுறும் வதனம்
வேட்கை கொடுத்திட வந்தாள் - அவள்
வேதனை தீர்த்திட வந்தாள்!
தங்கத்தில் அணிகலன் அங்கத்தில் அழகியல்
தாரகை பூமியில் கண்டேன் - அவள்
தந்த ஏகாந்தம் உண்டேன்
மங்கள ஜோதி மாதவன் ரூபம்
மங்கையு மானது கண்டேன் - அந்த
மகேசன் காதலைக் கண்டேன்!
மலர்ச்செண் டேந்தி மகிழ்வினைத் தூண்டி
மனத்தை அழித்திடும் தோற்றம் - அதில்
மாதவன் எழிலின் ஊட்டம்
உலகினை அளந்தென் உள்ளமும் அளந்த
உற்சவ மோகினிக் கோலம் - என்
உணர்வெல்லாம் அவன் ஜாலம்!
நெற்றியில் நாமம் நெஞ்சில் பதக்கம்
நெகிழ்த்தும் பக்திப் பிரவாகம் - இது
நாராயணனின் மாயம்
கற்றைச் சடைமுடி கமல மலர்ப்பதம்
கன்னிகை ரூபத்தில் கண்ணன் - என்
காளியின் அண்ணன் கண்ணன்!!
-விவேக்பாரதி
28.12.2017
Comments
Post a Comment