அழகன் கலிவெண்பா

காப்பு :

ழகரம் எடுத்துக் கவிதை வனைந்தேன்
குகன்தாய் பராசக்தி காப்பு !

நூல் :

தொழுதேன் ! தொழுதேன் ! அழகா ! கழலை
முழுதாய் விழுந்தே எழுந்தேன் ! புழுதிப்

பழத்தைக் கிழவிக் கழைத்துக் கொடுத்தாய்
மழலைத் தமிழை மழையாய்த் ! தழைக்கும்

உலகுக் களித்தாய் அழகு மயிலா !
பிழைக்கு ளுழன்றே அழுகும் எனக்குக்

குழந்தைக் குருவே விழியா லருள்வாய்
மெழுகாய் ஒழுகித் தொழுமென் வழக்கம்

முழுதாய் அடியேன் மரணித் திடுமந்
நிமிடம் வரையில் நெகிழேன் பரமா !

எழலை விழைவேன் ! எழிலே ! பதத்தில்
விழலை விழைவேன் ! தமிழின் மொழியை

பிழையா நிலையாய் அடியேன் வனைய
விழைவேன் முருகா ! எழில்வேற் குமரா !

பொழிலே ! அழகின் புனலே ! புகழை
அழியும் பெயரை விழையேன் குகனே !

பொழிவாய் ! பொழிவாய் ! அமிழ்தத் தமிழை !
ஒழிப்பாய் எனக்குள் ளிருக்கும் பிழையை !

உனையே நினைத்து வழியா விழியும்
உனையே துதித்து எழுதா மொழியும்

பொழியா முகில்போல் ! பயனில் வழிபோல்
அழிவே எனக்கு ! வடிவே லவனே !

எழுதும் எழுத்தின் எழிலும் உனதே
எழுதும் மொழியின் பொருளும் உனதே !

பவளப் பறழே ! பழமே ! தவமே !
தவறை யொழிக்கும் திருமால் மருகா !

குழையா அமிழ்தே ! குழையை அணிவாய் !
அழையா தெனக்கு மருள்வாய் வருவாய் !

வழியே ! வழியின் துணையே ! சிறியேன்
குழியில் வழுக்கி விழுந்தால் எழவே

தடியாய் வருவாய் தணிகை யரசே
மடியா தொழியா திருக்கும் மிடிமை

களைவாய் கமழும் எழில்மார் பழகா !
விளைவாய் மனதுள் விசையாய் ! விகடா !

தலையில் எழுதும் பழமா மயனை
நிலையாய்ச் சிறையில் நிறுத்தி னவனே !

உனையே துணையாய் மனதுள் நிறுத்தி
வனைந்தேன் சிறுவன் வளமாய்க் கவிதை

மிகவும் சிரமம் எனினும் முடித்தேன்
ழகரந் தனிலே கவி !

-விவேக்பாரதி
24.05.2015

Comments

Popular Posts