உழைப்பாளி

சாலைகள் செய்தருஞ் சோலைக ளாக்கியே
   சாதித்த தாருடைக்கை ? - எங்கும்
ஆலைகள் தோறுமே வேலைகள் செய்திடும்
   அன்புடைத் தோழரின்கை !

பூமிமு ழுவதும் பூரண மாகிடப்
   புழுங்கிய தாருடைத்தோள் ? - அந்தச்
சாமிம தித்திடும் எந்தொழி லாளரின்
   சாவைம றந்திட்டதோள் !

வண்ணச்செ ழுமைகள் செய்திங்கு நன்னிலம்
   வார்த்தது மார்மதியோ ? - தங்கள்
எண்ணஞ்சி றந்திட என்றுமு ழைத்திடும்
   எம்முழைப் பாளிமதி !

உண்டிடச் சோறுமு டுக்கவு டைகளும்
   ஊரிற்கொ டுப்பதுமார் ? - நன்கு
மண்ணைப்ப தஞ்செய்து மாபெரு மேருழும்
   மனிதரு ழவரன்றோ !

கண்ணிற்கி னியவாம் கட்டிட மாமலை
   காட்சிக்க மைத்ததுமார் - நல்ல
வண்ணமி ழைத்ததில் வார்த்தெழில் கூட்டிடும்
   வன்மைக்க லைஞரன்றோ !

இங்கேயு ழைத்திடும் வர்க்கமு மில்லையேல்
   இன்னுல குண்டாமோ ? - வாழத்
தங்களு ழைப்பினைத் தந்திடு வோரின்றித்
   தாரணி உண்டாமோ ?

என்றுமு ழைப்பவர் கையைப்பி டித்தவர்க்
   கேற்றத்தைக் காட்டிடுவோம் - பின்னர்
அன்னவ ரின்றியிங் கெஃதுமில் லையென
   அன்புடன் சொல்லிடுவோம் !

தன்னைம றந்துநம் வாழ்வினுக் காகாவே
   தானுமு ழைப்பவரை - மண்ணில்
மன்னர்க ளென்றுநாம் நல்லுரை செய்திடில்
   மாதவ மெய்துவமே !

-விவேக்பாரதி
24.04.2016

Comments

Popular Posts