பாவின் வேந்தன்

பாவின் வேந்தனே பைந்தமிழ் நேசனே
தாவி உன்னிடம் தான்சரண் என்றுபா
கூவி வந்திடும் ! கூர்சொலால் சாதியின்
வாவி வற்றவே வார்த்தைகள் கோத்தவா !

காதல் காவியம் கன்னியத் திராவிடம்
நீதி சொல்லிடும் நித்திலப் பாடல்கள்
ஓதி உண்டிடும் ஒண்டமிழ்க் கவிதைகள்
சாதி அணைத்திடுஞ் சாகர மானவா !

உன்பி றந்தநாள் உற்சாகப் பாவினால்
என்க டன்தனை எழிலுற முற்றினேன்
இன்னும் தாமதம் என்னவோ ? மண்ணிலே
இன்னு மோர்பிறப் பெடுந்துவந் தோங்குக !

-விவேக்பாரதி
29.04.2016

Comments

Popular Posts