சுதந்திர தினம்

அறுபத்தெட் டாண்டிற்கு முன்னால் நம்மை
   ஆண்டிருந்தான் வெள்ளையனும் ! அன்று தேசம்
வறுபட்டுப் பொறிபட்டு அழுது ழன்றே
   வாடிற்று வதந்கிற்று சோகம் என்றே
அறுபட்டுப் போனதடா வாய்மை நூலும்
   அடிபட்டுப் போனதடா அமைதிக் கோலும்
அறிவுற்றுப் பின்தேசத் தலைவர் எல்லாம்
   ஆர்த்தெழுந்தார் சுதந்திரத்தைக் கண்டோம் நாமும் !

கொள்ளையிருள் வேளையில்தான் சுதந்தி ரத்தைக்
   கொண்டோம்நாம் ! பாரதர்க்கு அன்று மட்டும்
நள்ளிரவில் வந்ததடா நல்ல விடியல்
   நட்டநடு நிசியினிலே உள்ள விடியல்
பள்ளமெலாம் மேடாக ! இந்தி யாவும்
   பாரதரின் நாடாக ! மகிழ்ச்சி யாக !
வெள்ளைஎலாம் பறந்தோடத் ! தேசம் விட்டு
   வேகமுடன் கப்பலேறி புறப்பட் டாரே !

சுயமாக ஆட்சிகொண்டோம் சுதந்தி ரத்தால்
   சுயமான இராஜ்ஜியத்தை அமைத்து நின்றோம்
நயமான சட்டங்கள் பண்பு யர்த்தும்
   நாகரிக சட்டங்கள் பின்ப மைத்தோம்
புயமொங்கி வல்லரசை எண்ணி இங்கே
   புறப்பட்டோம் இன்றும்நாம் அதனை நோக்கி
இயங்குகிறோம் இடையிடையே நின்றிட் டாலும்
   இனியிதையே மூச்சாகக் கொண்டு வாழ்வோம் !

இளையபார தத்தினரே எழுந்து நிற்போம்
   இருபதுக்குள் இந்தியாவை மேலே தூக்கிக்
களைந்திடுவோம் தீக்களைகள் ! நாட்டி னுள்ளே
   கவினுறவே மரம்வளர்ப்போம் ! கவிதை செய்வோம் !
விளைநிலத்தை உழுதிடுவோம் ! விலையி லாது
   வித்தகமாய்க் கல்வியினைக் கொடுத்தி ருப்போம்
முளைவிடுவோம் வேராக ! நன்மை தன்னை
   மூச்சாக கொண்டுவாழ்வோம் ! நன்றி ஜெய்ஹிந்த் !


-விவேக்பாரதி
15.08.2015

Comments

Popular Posts