கவிதை யாதென

உள்ளத் துணர்வுகளை உள்ளதை உள்ளபடித்
தெள்ளத் தெளிவாகத் தென்தமிழில் அழகாக
வெள்ளம் பாய்வதுபோல் வேகமுடன் பாய்ச்சுவதே
கொள்ளைக் கவிதையெனக் கொண்டிடுவார் தமிழறிந்தார் !

எண்ணத் தசைவுகளை எழில்சேர்த்து இதமாகும்
வண்ணங் கோத்ததிலே வகைவகையாய் உவமைகள்
பண்ணுந் தொழிலினையே பாவனையும் கலையென்று
கண்ணிற் காட்டிடுவார் கவிதைக்கலை கற்றறிந்தார் !

பார்க்கும் பொருளைஎலாம் பாடுபொருள் என்றமைத்து
வார்த்தை அருவியிலே வந்துத்தான் தலைகாட்டிக்
கோர்த்துச் சொல்மணிகள் கொட்டுவதே கவிதையெனப்
பார்க்குள் எப்பொழுதும் பகன்றிடுவர் மொழிபயின்றார் !

இந்தச் சமூகத்தில் இருக்கின்ற இன்னல்களை
எந்தத் தருணத்தில் எப்பொழுது கண்டாலும்
முந்தி மனதிற்குள் மூள்கின்ற தீப்பிழம்பைச்
சிந்துங் கவியென்று சிறப்புடையோர் கூறுவரே !

-விவேக்பாரதி
25.07.2015

Comments

Popular Posts