கேள்வி தொடுக்கிறேன்

அலையும் மேகங்களே ! - உமை
   அமிழ்த்தி அழகு வடிவங்களாய்க்
கலைகள் ஆக்கியதார் ? - விடை
   காட்டுங்க ளேன்சுவை கூட்டுங்களேன் !
மலையின் வடிவங்களே ! - உமை
   மாபெரும் முளிகொண்டு வளைவுகளாய்
சிலைசெய்த தார்செயலோ ? - பதில்
   சாற்றுங்க ளேனறி வூற்றுங்களேன் !

காற்றுக் கிடையினிலே! - மணங்
   காட்டிப் பறக்கின்ற மலரினங்காள்
தூற்றி உமையுமிங்கே - வெகு
   தூரத்தில் விட்டதும் யாருரைப்பீர் ?
சேற்றுக் குளத்திடையே - ஒழி
   சேர்ந்து விளங்கிடும் தாமரைகாள்
சேற்றிடை உங்களையும் - நிலை
   சேர்த்தது மார்வினை சாற்றுமினே !

வானக் கருமைகளே - மிக
   வாரித் தெளித்தும்மில் விண்மீனை
மானப் பெரிதனவே - எழில்
   மன்னப் பதித்தது மார்பணியோ ?
கானக் குயிலினமே - இசை
   கற்றுக் கொடுத்தது மாருரைப்பீர்
ஏனித் தாரணியில் - விடை
   ஏற்றிடாக் கேள்விகள் வாழுதுவோ ?

யாரிங் குரைத்திடுவார் ? - புவி
   யாரால் இயங்கு தெனுங்கதையை
யாரிங்கு மொழிந்திடுவார் - எனை
   யாண்டிடும் ஐயத்தைத் தான்களையப்
பாரினி லாருளரோ ? - விடை
   பகருமின் ! பகருமின் ! அறிவுடையீர் !
சீரிய அறிவுபெறக் - கவிச்
   சிறுவன் முயல்கிறேன் பகருமினே !

 -விவேக்பாரதி
16.08.2015

Comments

Popular Posts