தேசத்தைக் காப்பவள் மாரி
எங்கும் எதிலும் மற்றெல்லா விடத்திலும்
சக்தியைக் காணுகிறேன் - அதனால்
முக்தியைப் பூணுகிறேன்! வானின்
மங்குலிலே மழைச்சாரலிலே யவள்
மாநடம் செய்கின்றாள் - நல்ல
மானிடம் செய்கின்றாள்!
பச்சை நிறங்கொண்ட வேப்பிலையில், அவள்
உருவம் காணுகிறேன் - இளகிடும்
கருவம் காணுகிறேன்! என(து)
உச்சந் தலையினைத் தீண்டிடுங் காற்றெனச்
சக்தியவள் விரலும் - கொதிடச்
பக்திமிகத் திரளும்!
நெஞ்சுக்குள்ளே அவள் நேரிய சிந்தனை
தன்னையும் ஆற்றுகிறாள் - அதுகொண்டு
என்னையும் ஏற்றுகிறாள்! பகை
அஞ்சி நடுங்கிட அன்னை எனக்குள்ளே
செந்தமிழ் வீசுகிறாள்! - கவிதையில்
என்னுடன் பேசுகிறாள்!
மொத்த உலகமும் முக்தி அடைந்திட
மோட்சத்தைத் தாவென்றேன் - அருள்மழை
வீசிட வாவென்றேன் - இந்தப்
பித்தனின் விண்ணப்பம் ஏற்றுப் புவியினில்
பாதம் பதித்திடுவாள், - உடன்வரும்
சேதம் மிதித்திடுவாள்!
தேசத்தைக் காப்பவள் மாரி என்னும்விதி
தேருக நெஞ்சகமே - இனியொரு
போரில்லை உன்னிடமே! சக்தி
வாசக் குழல்தொடும் பூவினைப் போலொரு
வாழ்க்கை கிடைக்கணுமே - அதுவரை
வாக்கு தொடர்ந்திடுமே!!
-விவேக்பாரதி
17.09.2015
Comments
Post a Comment