உமை அழகு

அப்பர் சாமி கோவிலில், அம்பாள் தந்த அழகியல்!! 

குங்கும வாசக் கோலத்தி லேயவள்
      கொலுவி ருக்கு மழகு - ஒரு
  குணமு மிலாத மூடனின் நெஞ்சில்
      கோயில் கொண்ட தழகு!
எங்குமி ருக்கும் காற்றினில் பாடல்
      எழுத வைப்ப தழகு! - அந்த
  ஏந்திழை யாளுமை யாள்சிவ காமியை
      ஏத்தும் நெஞ்ச மழகு! 

நெற்றியில் சந்தனம் மின்னிட வேயவள்
      நேரில் நிற்ப தழகு! - என்
  நெஞ்செழும் மாயையைப் பஞ்செனத் தீய்த்திடும்
      நெருப்பு விழிக ளழகு!
கற்றைச் சடைதனி லம்புலி மீன்கள்
      காட்சி தருவ தழகு! - ஒரு
  கருப்பு நிறத்தினள் காவிய ஜ்வாலையென்
      காளி முகத்தி னழகு!

பக்கவி ளக்கொளி பரவிடக் குறுநகை
      பார்த்துச் சிரிப்ப தழகு! - ஒரு
  பார்வையி லேமனச் சோர்வைய கற்றிடும்
      பாவை யிமைக ளழகு!
தொக்கவ ரும்பிழை தொல்லைம னத்தினைத்
      தோற்க டிப்ப தழகு! - தம்பி
  தோகை மயில்குகன் வேலி லிருப்பவள்
      தோன்றும் தோற்ற மழகு!

காரிரு ளாம்சிவத் தமைதியி லேயவள்
      கவிதை படிப்ப தழகு! - நம்
  காரிய மாக்கிடும் காரணி யாயிவள்
      கடமை செய்வ தழகு!
பேரிகை போலிள நெஞ்சை இசைத்துப்
       பேறு தருவ தழகு! - அவள்
  பேருரைப் பாயென நெஞ்சையொ லிக்கையில்
      பெருகு மின்ப மழகு!

காகம் கரைவதில் கவிதை நிறைவதில்
      காட்சி தருவ தழகு! -பெரும்
  காலவ னத்தினை ஆண்டுகி டந்திடும்
      ககன மனது மழகு!
தாகமெ டுக்குமு யிர்க்கமு தாகிடும்
      தண்மை அருளு மழகு! - ஒரு
  தாயவள் பேருமை  யாளென  வேநிதம்
      சொல்லிச் சொல்லிப் பழகு!!

-விவேக்பாரதி
08.01.2018
  

Comments

Popular Posts