மாய பூகம்பங்கள்

சிலதிடீர் சலனங்கள் சிக்கல்கள் சோர்வுகள்
சிலபுது மயக்கங்கள் சினமேற்றும் கலக்கங்கள்
சிலசில எனப்பல சிந்திடும் போதிலே
மலரெனும் மனதிலே மாயபூ கம்பங்கள்!
*
ஏதோ ஒன்றை இழப்பது போல
   எனக்குள் ஓருணர்ச்சி
ஏதோ ஒன்றைத் தவிர்ப்பது போல
   எனக்குள் ஒருகிளர்ச்சி
தீதோ நன்றோ தெரியே னம்மா
   திமிரை விட்டுமிலேன்
தீந்தமி ழன்னாய் பூந்தமிழ் மாந்தும்
   தும்பிசொல் கேட்டிடம்மா!
*
எனக்கென்ன வேலை ஏனிந்த மௌனம்
   ஏதேனும் பேசு தாயே!
எதற்கிந்த ஆற்றல் ஏனிந்தச் சீற்றம்
   என்னோடு பேசு தாயே?
உனக்கென்ன செய்தேன்? ஊர்க்கென்ன செய்வேன்?
   உணர்வுக்கும் என்ன செய்தேன்?
உன்மடியில் வைத்தே அமுதத்தை ஊட்டும்
   உண்மையே தமிழத் தாயே!

கவிமட்டும் வார்க்கும் கலைகாட்டி விட்டாய்
   கவிதைகள் ஏதற் கம்மா?
கணைபோலச் சொற்கள் நிதம்வீச வைத்தாய்
   கருணையி தேதற் கம்மா?
குவிக்கின்ற உரைகள் குறைவற்ற கதைகள்
   கொடுத்திடும் ஆற்றல் மட்டும்
குறிக்காது சென்றாய்! என்குற்ற மென்ன?
   குணவதீ சொல்க தாயே!

படிக்காத பிழையா? பழிவாங்கும் செயலா?
   பாலனைத் தண்டிப்பதா?
படைக்கின்ற சுற்றம் வெறுக்கின்ற போக்கைப்
   பலவாறு செய்விப்பதா?
முடிக்காத வேலை பலகொண்ட போதும்
   முயலாமல் இருக்கும் சித்தம்
முரிந்தாக வேண்டும் முயல்கின்ற வேக
   முடுக்கது வேண்டும் வேண்டும்!

உன்சொற்கள் தந்தாய் உன்மீது காதல்
   உயர்ந்திடப் பார்த்தி ருந்தாய்!
உன்காட்சி தந்தாய் உன்புகழ் பாடும்
   உன்னதச் சுற்றம் தந்தாய்!
என்ஜென்மம் தீரும் வரைநின்றன் காதல்
   எப்போதும் குறையா தம்மா!
எனக்கென்ன வேலை? ஏனின்னும் மௌனம்
   ஏதேனும் பேசி டம்மா!!

-விவேக்பாரதி 😥
19.01.2018

Comments

Popular Posts