காளிக்கு வினா

எந்த நினைப்பினில் இந்தப் புவிதனை
   எழுதிவைத்தாய் காளி? - உனக்
கிந்தப் புவிபடும் இன்னல் குரல்செவி
   எட்டுதுவோ காளி?
தந்தை சிவனுடன் தக்க இடத்தினில்
   தங்கிவிட்டாய் காளி! - உனைச்
சிந்தை நிறைந்திடும் சின்னவன் கேட்கிறேன்
   சீக்கிரம் சொல்காளி!

ஊரி லொருபுறம் ஊமைப் புகைவந்து
   உயிரைக் கேட்கிறது - ஒரு
காரண மின்றி கண்கள் எரியுறக்
   காட்சி கலைகிறது!
போரி லிறந்தவர் போலப் பிணியினில்
   போகு முயிர்கோடி - இவை
யாரு முனதெழிற் காதில் முனம்வந்து
   யாத்தனரோ காளி?

நெஞ்ச மொருபுறம் நெளியும் கனவினை
   நிகழ்ந்தி வைக்கிறது - அதைக்
கொஞ்சம் பிடித்திடக் கோல மதிசெயும்
   கூத்து வலிக்கிறது!
தஞ்ச மடைந்திட நாதி இலாமலே
   தாரணி தோற்கிறது - கொடும்
நெஞ்சை நிகர்க்குமெம் வாழ்க்கை வேறெங்கும்
   நிகழ்ந்திடுமோ காளி?

காதில் பொய்ப்புகழ் ஏறிக் கிளர்த்திடக்
   கல்லென மாறினையோ? - சுகப்
போதென் றிதையெணிப் போகம் அழைத்திடப்
   போந்தனையோ காளி?
வாதை அடைந்திடும் பிள்ளை யழுகுரல்
   வாட்டம் தணிகவென்றே - வரும்
சூதைத் தடுத்திடும் சூட்டை அடைவதில்
   சோம்பலும் என் காளி?

நம்பிக் கிடப்பவர் நல்ல மனத்தினில்
   நன்மை விதைத்துவிடு - தினம்
வெம்பிக் கிடப்பவர் வாதை அகன்றிட
   வெற்றியைச் சேர்த்துவிடு!
நம்பிப் பலதொழில் நாளும் இயற்றிடில்
   நாடிமுன் வந்துவிடு! - அடி
அம்பிகை யேயின்னும் கேள்வி எழுந்திடில்
   அதற்கும் விடையைக்கொடு!!

-விவேக்பாரதி
30.01.2018

Comments

Popular Posts