வடபழனி பதிகம்
காப்பு
தண்டாய்த பாணி தமிழ்கேட்டே விப்பதிகம்
கொண்டா னவனே கொடுத்தவனும் - செண்டாய்க்
கொடியாய்ச் சிறிய கொசுவாக வேனும்
வடபழனி வாழ்தல் வரம்!
பதிகம்
வடபழனி முருகென்னும் வடிவழகைக் கண்ணுற்ற
வாழ்த்துடைய திருநாளிலே - எனை
வருடியது சிறுதென்றல் விலகியது பிடிமாயம்
வாழ்க்கையின் பொருள் நின்றது!
கடகடென விழியருவி கன்னம் நனைத்தென்னைக்
கழுவியொரு நிலை தந்தது - எழில்
கலாபத்தில் ஓரொளியென் நெஞ்சத்தில் ஊடுருவிக்
கருணைமுக மலர் தந்தது!
திடமனது குழவிகரம் பட்டதொரு சிறுகூழாய்த்
திறனற்று சரண் என்றது - வந்தத்
திவ்யக் கலாபத்தின் பொன்னிறச் செவ்வேலென்
திசைமறைய எனைத் தொட்டது!
அட!யினிமை இது!புதுமை ஆண்டவா உன்மகிமை
ஆசைமொழி சொன்னதம்மா - என்
அன்னை மீனாட்சியுமை பாலனின் காட்சியெனை
ஆட்கொண் டிருந்ததம்மா!
கனவுவரும் நிமிடமெது நினைவுவரும் வழியுமெது
கருத்துக்குத் தெரியுமாமோ? - ஒரு
கடவுளவன் குருவெனுமோர் வடிவாகி வரும்நேரம்
கழுதைக்குப் புரியுமாமோ?
எனதெனது வழியெனது வாழ்வெனது எனும்சிந்தை
எத்தனை பிள்ளைத்தனம் - இதை
என்நெஞ் சறிந்துவிடச் சின்னஞ் சிறுமயிலில்
என்முன்னம் தெய்வத்தடம்
மனதிலோர் ஆச்சர்யம் மறுகணம் யுகத்துன்பம்
மாறியடி புயலானது - வந்து
வாழ்விப்ப தாரின்று மூழ்கிடச் செய்வதார்
வாழ்க்கையோர் புதிரானது!
அனைவரும் இருந்தவிடம் அரைநொடியில் கடவுளுடன்
அறிவிலியை வைத்ததம்மா - என்
அன்னை மீனாட்சியுமை பாலனின் காட்சியெனை
ஆட்கொண் டிருந்ததம்மா!
தாயின்கரு வறையிலே எதுமற்ற வெண்ணிறத்
தாளாய்க் கிடந்த நேரம் - இந்தத்
தரையில் விழுந்ததும் அத்யாயம் ஒவ்வொன்றும்
தானாய்ப் பதிந்த நேரம்
நேயமும் பக்தியும் காமமும் பொய்ம்மையும்
நெஞ்சை நிறைத்த நேரம் - சென்ற
நேற்றோடு நின்றபடி காற்றோடு வெந்தபடி
நெளிந்தே கழிந்த நேரம்
நாயினேன் தாள்நீங்கி எழுத்துகள் மட்டுமே
நஞ்சாய் நிறைந்த நேரம் - எது
நானென்ற கேள்வியொடு தாளே மறைந்துபோய்
நடுவீதி கண்ட நேரம்
ஆயகலை நாயகன் ஆதிமகன் கண்களால்
அறிவினைத் தந்தானம்மா - என்
அன்னை மீனாட்சியுமை பாலனின் காட்சியெனை
ஆட்கொண் டிருந்ததம்மா!
அத்தனை அருகிலே அழகனை முருகனை
அதுவரை கண்டதில்லை - எனை
அறிவினில் உலுக்கியே விழிகசிய இதுவரையில்
அவனுமே தொட்டதில்லை!
பொத்தெனப் பழவினை பொடியெனத் தூளெனப்
புதையவே வீழ்ந்ததம்மா! - என்
புத்தியினில் அற்புதமி ழைத்தவொரு முத்துரதம்
புதியதாய் நின்றதம்மா!
முத்துமணி கொட்டிவரும் முருகன் சிரிப்புமுகம்
முழுதும் தெரிந்த பின்னால், - மனம்
முணகுவது நீங்கி,யென் முயற்சிகள் நீங்கி,யது
முகைபோல் குவிந்ததம்மா!
அத்தர்மணம் சந்தனமும் தூபமிடும் வாசனையும்
ஆண்டே கிடந்ததம்மா - என்
அன்னை மீனாட்சியுமை பாலனின் காட்சியெனை
ஆட்கொண் டிருந்ததம்மா!
திரையோடு காட்சிவரும் திரையில் நெருப்புவிழும்
திரையதுவும் எரிந்திடாது! - ஓர்
தினத்தில் பகலும்வரும் உடனே இருட்டுவரும்
திட்டமிது மாறிடாது!
தரையோ டிருக்கும்வரை நானன்றி விழிப்புக்குத்
தனிவழிகள் ஏதுமில்லை! - அந்தத்
தானை மறக்காது தரைவாழ்வு விடிவுபெறத்
தங்கிடும் வழிகளில்லை!
விரைவாகச் செல்கின்ற காலத்தின் ஓட்டத்தில்
வீற்றிருந் தாருமில்லை - இதில்
வீணாக அலைபவர் தேடலைப் பயணமாய்
வீதிகள் பார்த்ததில்லை!
அறைந்தே இவற்றையென் அடிநெஞ்சில் மேடையிட்
டறிவாய்க் கொடுத்தானம்மா - என்
அன்னை மீனாட்சியுமை பாலனின் காட்சியெனை
ஆட்கொண் டிருந்ததம்மா!
தொட்டுவிழும் ஒருமழையின் துளிநோக்கி யேவிதைகள்
துவக்கும் தவத்தை மண்ணில் - துளி
தொட்டுவிட் டால்கொண்ட கேள்வியின் குறிகளைத்
தொடர்ந்தே விரிக்கும் விண்ணில்!
பட்டுமெத் தைத்தூக்கம் பஞ்சணை கொண்டாலும்
பஞ்சமோ கேள்வி நிற்க - அந்தப்
பக்குவம் அடைந்தவுடன் பட்டிணத் தடிகள்வழி
பாடங்கள் வாழ்வில் கற்க!
முட்டிவரும் கோபமும் ஆசையும் காமமும்
முழுமைக்கு நாமும் இல்லை - இந்த
முடிச்சை அவழ்க்கின்ற காலம் நெருங்கியபின்
முயற்சிகள் தேவையில்லை!
அட்டவணை இட்டுப்பணி ஆற்றிக் கிடத்தலையே
ஆதிகடன் என்றானமா - என்
அன்னை மீனாட்சியுமை பாலனின் காட்சியெனை
ஆட்கொண் டிருந்ததம்மா!
தேனூறும் பாடல்கள் அமிழ்தமாய்ச் செவியோரம்
தேடியே தந்த தெய்வம்! - மனத்
தெளிவைக் கொடுத்திட அழலைப் பதித்திடத்
தேரேறி வந்த தெய்வம்!
ஞானாதி காரத்து வார்த்தையைச் சிறுவனின்
நனிகாதில் சொன்ன தெய்வம் - தன்
நல்லதரி சனமென்னும் வெல்லமலை முன்வைத்து
நான்வியக்கப் பார்த்த தெய்வம்!
வானாகி அன்புமழை தூறித் துளிர்க்கின்ற
வழிசொல்லித் தந்த தெய்வம் - என்
வாழ்க்கையொரு குமிழியதை வண்ணக் கடல்காட்டி
வலிமைதர வந்த தெய்வம்!
ஆனாலும் அவனென்னை தேடவிட் டாட்டுகிற
அசட்டுக் குறும்பனப்பா - என்
அன்னை மீனாட்சியுமை பாலனின் காட்சியெனை
ஆட்கொண் டிருந்ததம்மா!
காளிமகன் என்முன்னம் காற்றாகி வந்ததிருக்
காட்சியைக் கண்டுகொண்டேன் - அவன்
கவிதை நெருப்பிலே கனலின் தெறிப்பிலே
கால்பற்றி நின்று கொண்டேன்!
தோளழகன், மயிலுடன் நிற்கின்ற நாயகன்
தோற்றத்தைக் கண்டுகொண்டேன் - மனம்
தூளாகிச் சிதறியவன் தாளில் மலர்களாய்த்
துரும்பாகக் கண்டுகொண்டேன்!
வேளிருக் கும்பதி வடபழனி மீதிலென்
மனத்தினில் என்று கொண்டேன் - அந்த
வேளையில் மலர்வந்து தானென்று பதில்சொல்ல
வெற்றியைக் கண்டு கொண்டேன்!
ஆளிருக் கும்புவி அத்தனையும் ஒருநொடியில்
அத்தமனம் ஆனதம்மா! - என்
அன்னை மீனாட்சியுமை பாலனின் காட்சியெனை
ஆட்கொண் டிருந்ததம்மா!
சிற்றெறும் பென்மீது பணங்காயை வைத்ததும்
சிறியவன் நாடகம் தான்! - மொழி
சிதறிவரும் பாடல்கள் சித்திரம் முருகவேள்
சிரிக்கின்ற ஊடகம் தான்!
கற்றுவரும் கல்விகளும் பெற்றுவரும் அனுபவமும்
கடைநாள் வரையினில் தான்! - இடம்
கடக்காமல் மீண்டும்நாம் ஜனிக்காமல் வாழ்ந்திடக்
கடவுளின் கால்தடம் தான்!
வற்றிவிடும் அன்பும் வதங்கிவிடும் ஈரமும்
வடிவேலின் முன் துளிர்க்கும்! - ஒரு
வசந்தப் பிராயத்தில் வண்ணமயில் நெஞ்சோரம்
வாழவே சொல் கொடுக்கும்!
அற்றுவிழும் திரையதனில் அடங்கிவிடும் ஆட்டங்கள்
அறிந்தே வியந்தேனம்மா! - என்
அன்னை மீனாட்சியுமை பாலனின் காட்சியெனை
ஆட்கொண் டிருந்ததம்மா!
சிந்தனை முழுவதும் சிவன்மகன் ராஜ்ஜியம்!
சில்லாகிப் போன காலம்! - என்
சிற்றின்பப் பேரின்ப நினைவெலாம் மீண்டுமவன்
சிரிப்பினைக் காண ஏங்கும்!
வந்தித்து வந்தித்து மீண்டுமதைப் பார்த்திட
வடபழனி மேவும் கால்கள் - நான்
வந்ததை அறிந்துமே வளநகை காட்டாமல்
வாலாட்டி ஓடும் கந்தன்!
தொந்தமென மறுபடியும் சூழ்வினைகள் என்னையே
தொடரக் கலங்குகின்றேன்! - அவன்
தோன்றுமிடம் தேடியே மற்றுவழி இல்லாமல்
தூக்கம் விழிப்பு தீர்த்தேன்!
அந்தரி மகன்முருகன் அருட்காட்சி மீண்டும்தர
ஆவியோ ஏங்குதம்மா! - என்
அன்னை மீனாட்சியுமை பாலனின் காட்சியெனை
ஆட்கொண் டிருக்குதம்மா!!
-விவேக்பாரதி
24.05.2019
குரல்வழிப் பதிவு :
அடடா! மிக அழகு!
ReplyDelete