எட்டுவை எட்டுவை



வானத்தில் எத்தனை வண்ணங்கள்! ஆனால்
கண்ணுக்குத் தெரிவது நீலம்! – இந்த
வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள்! ஆனால்
கண்முன்பு தெரிவது வாழ்க்கை! 


ஆக!
எட்டுவை எட்டுவை எட்டுவை!
மற்றதெல்லாம் கொஞ்சம் விட்டுவை!

சின்ன எறும்பை நீ பார்த்தாலே
அது சுறுசுறுப்பை என்றும் மறப்பதில்லை
குருவிக் கூட்டை நீ பார்த்தாலே
அது கூடு கட்டச் சாத்திரம் படிக்கவில்லை!

எதுவும் கடக்கிற கணத்தில்
ஞாபகம் எல்லாம்
ஞானமாக மாறும்!
அட! இதுக்கென்ன தயக்கம்
விழுந்தபின் எழுவதில்
வீடு சேரலாகும்!

ஆக!
எட்டுவை எட்டுவை எட்டுவை!
மற்றதெல்லாம் கொஞ்சம் விட்டுவை!

நினைவுகளா உன்னைச் சிறையாக்க? சிறு
நிழலைக் கண்டா நீ பயமாக?
புனைவுகளா உன்னை முடமாக்க? வெறும்
பூட்டினுக்கா மனம் மிக வேர்க்க?

பொதுவில் நடப்பதை ரசித்தால்
நிகழ்கிற வாழ்க்கை
நித்தம் நித்தம் இன்பம்!
வா! விதிகளைச் சிரிப்போம்
விளையாடி ரசிப்போம்!
காலம் நகரும் பிம்பம்!

ஆக
எட்டுவை எட்டுவை எட்டுவை
மற்றதெல்லாம் கொஞ்சம் விட்டுவை!

பாடல்:

-விவேக்பாரதி
31.07.2019

Comments

Popular Posts