கண்ணன் வருகை
புல்லாங் குழலிசை கேட்கும் - மனம்
புரியாமல் எங்கெங்கும் பார்க்கும்! - பின்பு
எல்லாம் ஒருநொடியில் மறையும் - அங்கு
என்கண்ணன் முகம்மட்டும் தெரியும்!
இதில்
இல்லாத சுகமில்லை இனிவேறு சுகமில்லை
சொல்லாமல் வாய்மூட நெஞ்சுக்குத் துணிவில்லை!
சொல்லச்சொல்ல அடங்காத கண்ணன்! - அவன்
சொல்லும்போதே மறையும் கள்வன்!
நீலப் பீலிமயில் பார்க்கும் - வந்து
நித்தம் அதுபுரந்து காக்கும் - சின்னக்
கோலம் இன்பங்களைச் சேர்க்கும் - மனம்
கோகுலத்தின் வழியாகிப் பூக்கும்
இந்தக்
காலத்தில் தனியின்பம் கவிதைக்குள் அவன்பிம்பம்
கணநேரம் யுகமாகிக் கலங்கிடும் வகைதங்கும்!
எண்ணம் எங்கும் நிழலாகக் கண்ணன் - அவன்
எவருக்கும் தெரியாத கள்வன்!
நெஞ்சம் பசுக்கூட்டம் ஆகும் - அது
நெக்குருக கானமுடன் சேரும் - அவன்
கொஞ்சம் சிரித்தாலே போதும் - இந்தக்
கொள்ளைவுயிர் மோட்சத்தினைச் சேரும்
வந்து
மஞ்சாக அவன்நின்று மழைமாலை தரும்போதும்
மனம்கொஞ்சத் திருப்பாதம் மண்மீது வரும்போதும்
வஞ்சகங்கள் இல்லாமல் தீரும் - எங்கும்
வெற்றியெனும் பொற்கிரணம் ஏறும்!!
-விவேக்பாரதி
24.08.2019
Comments
Post a Comment