யாருக்குப் பாடுகிறேன்
யாவருக்கும் படுகிறேன் - உழைக்கும்
தோழருக்குப் பாடுகிறேன்
தாவிவரும் பிள்ளைகளை - அவரின்
தாயாகப் பாடுகிறேன்!
முன்னெழுந்து பாடுகிறேன்! - இளைஞர்
முயன்றிடப் பாடுகிறேன்!
பின்னழுந்திக் கிடப்பவர்கள் - புயலாய்ப்
பீறியெழப் பாடுகிறேன்!
பெண்களுக்குப் பாடுகிறேன் - அனைத்தும்
பெற்றுவிடப் பாடுகிறேன்!
மண்ணிலுள்ள உயிர்களெல்லாம் - வாழ
மகிழ்ச்சியைப் பாடுகிறேன்!
இயற்கையைப் பாடுகிறேன் - அதன்
இதயத்தைப் பாடுகிறேன்!
செயற்கையைப் பாடுகிறேன் - அதன்
செழிப்புகள் பாடுகிறேன்!
பாட்டுக்கோர் சக்தியுண்டு - அதனைப்
பாரதம் கண்டிடட்டும்!
பாட்டைப் படித்துநிதம் - உணர்வால்
பலசாலி ஆகிடட்டும்!!
-விவேக்பாரதி
26.10.2017
Comments
Post a Comment