துர்கைக்கு அழைப்பு
சுற்றி இருக்கும் பொய்மை உலகில்
சுடரின் வெளிச்சம்கொடு - ஒரு
பற்றைப் பிடித்துப் பாரில் நடக்கப்
பாதச் சுவடுகொடு!
நெற்றி முகப்பில் நெருப்புக் கோளம்
நேரே நடந்துவிடு! - உன்
கற்றைச் சடையால் காற்றாய் வருடிக்
கவிதை கொடுத்துவிடு!
அம்மா என்றே நானும் அழைக்க
அண்டி அமர்ந்துவிடு - அட
சும்மா இன்னும் விளையாட் டென்ன
சுவையாய் முத்தம்கொடு!
இம்மா நிலத்தை எழுதும் ஆற்றல்
இதயத் தளத்திலிடு! - உன்
பெம்மா னுடன்நீ ஆடும் களியைப்
பேதை விழிக்குக்கொடு!
சிவனின் பாகம், சிறந்தோர் நெஞ்சம்,
சிறப்புப் பீடங்கள், - பல
அவனி முழுக்க ஆடும் காற்றில்
அசையும் தேர்க்கோலம்,
கவிதை பாடும் கவிஞர் நாக்கு,
கருத்தில் அமர்பவளே - பின்
எவணென் நெஞ்சில் ஏறி அமர்ந்தாய்?
எனக்குச் சொல்லுமையே!
மீண்டும் மீண்டும் பிறந்து நின்றன்
மின்னல் நேர்முகத்தை - அருள்
தூண்டும் கவிதைத் தூசால் வருடித்
தொட்டுத் தாலாட்டி
வேண்டும் வேண்டும் எனநீ கேட்க
வேண்டும் பணிசெய்து - எனை
ஆண்டாய் நீயென் றகத்தே மகிழும்
அந்தப் பதவிகொடு!
மடியில் அமர்த்தி மதுவைப் புகட்டி
மயங்கி விழவைத்து - ஓர்
அடியி லெழுப்பி அண்ட நிழலை
அகத்தில் விழவைத்துத்
துடிக்கும் நெஞ்சைத் தூக்கி நிறுத்தித்
தொல்லை அறவைத்து - சொல்
படிக்கு நடக்கும் பழக்கம் அதனைப்
பரிவாய்த் தந்துவிடு!
காளி நீலி கங்கா ளிசா
முண்டி பைரவியே - எனைத்
தோளில் ஏற்றி அகிலம் காட்டும்
தோன்றாப் பெருநிதியே!
நாளும் நாளும் அலையும் வாழ்வை
நல்ல வழியில்விடு! - மடித்
தூளி யளித்துக் கனவு கொடுக்கும்
துர்கே வந்துவிடு!!
-விவேக்பாரதி
15.03.2018
Comments
Post a Comment