பறவையாய்ப் போக

கட்டற்ற வானில்
இறக்கை விரித்து
முட்டும் நினைப்பில்
மூக்கைச் செலுத்திப்
பறவையாய்ப் போக ஆசை!


காணும் வெளியில்
கவிதை படித்துக்
கானக் குரலில்
கனவு படைத்துப்
பறவையாய்ப் போக ஆசை!

ஏக்கம் இல்லா
ஏகாந்த பரப்பில்
தூக்கம் இன்றி
தொலை தூரங்கள்
பறவையாய்ப் போக ஆசை!

கடவுள் பதத்தைக்
கண்ணால் கண்டு
கிடக்கும் மானுடக்
கீழ்மைகள் ஏசிப்
பறவையாய்ப் போக ஆசை!

திரும்பிப் பார்க்கிறேன்
எழுத்துச் சிறகு
சிலுப்பிக் கொள்கிறது,
வானம் கைநீட்டுகிறது,
கால்களை உந்திக்
கவிதைப் பரப்பில்
கலந்து கரைகிறேன்!
ஆம்
நான் பறவையாய்ப் போகிறேன்!!

-விவேக்பாரதி
10.03.2018

Comments

Popular Posts