வெற்றி வாசகம்
எதுதான் உலகில் நிரந்தரமோ - நாம்
எதனைத் தேடி அலைகிறமோ ?
எதுதான் முடிவோ விளையாட்டில் - யார்
எழுதி வைத்தார் தலையேட்டில் ?
வானம் வெளுக்கத் துவங்கியதும் - நம்
வாழ்க்கை துவங்கி விட்டதென
மோனம் நீங்கி ஓடுகிறோம் - வெறும்
மோனம் கலைப்பதுவா வாழ்க்கை ?
யாரோ சொல்ல நாம் கெட்டு - வழி
யாவும் கண்டோம் என்கின்றோம் !
ஊரோடு அவ்வழி போகின்றோம் - பிறர்
உருவாக்குவதா நம் மார்க்கம் ?
செல்வம் கொஞ்சம் சேர்ந்துவிட்டால் - நாம்
செழித்து விட்டோம் என்கின்றோம்
நில்லாப் பணமா நம் செல்வம்? - ஒரு
நிலையில்லாமை செழிப்பாமோ ?
தலை தான் நரைத்து விட்டாலே - அவர்
தளர்ச்சி கண்டார் என்கின்றோம் !
மலைக்கும் நரைக்கும் மேகத்தால் - அம்
மயக்கம் கூடத் தளர்வாமோ ?
வாழ்க்கை யாதென்று அறியாமல் - இவ்
வழியில் எங்கு ப்ரயத்தனமோ ?
வாழ்ந்து முடிக்கும் கணத்தில் தான் - இதன்
வாய்மை என்பது புலப்படுமோ ?
நம்மை நாமே நேசிக்க - வரும்
நன்மை மட்டும் சுவாசிக்கப்
பொம்மை போலே இருந்தாட - மனப்
பொய்மை அகற்றி உறவாடக்
கற்றுக் கொள்ளப் பார்ப்போமா ? - இல்லை
கடைசியில் போய்த் தோற்போமா ?
வெற்றுத் தாளாம் உடல் மேலே - பெரும்
வெற்றி வாசகம் பதியாதா ?
-விவேக்பாரதி
08.07.2017