எதற்குக் கவிதை எழுதுகிறேன்...

"எதற்குக் கவிதை எழுதுகிறாய் ?"
    என்றே என்னைக் கேட்கின்றார்
இதற்கென் றெதனைச் சொல்லுவது ?
    இமயம் போல இங்குளது !
கதவைப் பூட்டும் தாழ்ப்பாள்போல்
    கவிஞன் நெஞ்சில் ஒன்றிருந்தால்
இதனை எழுதிக் கிடப்பேனோ ?
    இயற்றும் கவியில் திளைப்பேனோ ?


அழகைப் பார்த்தால் என்கைகள்
    அடடா என்றே வரைகிறது !
குழந்தைச் சிரிப்பில் கடவுளவன்
    குணத்தைக் கண்டு விரைகிறது !
இழப்பை எல்லாம் நினைப்பதில்லை !
    இருப்ப தன்மேல் விருப்பமில்லை !
விழைந்து சேர்க்கப் பொருளுமில்லை !
    விசித்திரம் தான் கவிஞன்நிலை !

அற்பப் பொருளைக் கண்டாலும்
    அழகோ அழகென் றுரைத்திடுவேன் !
சொற்க ளுக்கும் உயிரூட்டிச்
    ஜோடி சேர்த்து வைத்திடுவேன் !
கற்றோர் காணும் இன்பத்தைக்
    கல்லா தோர்க்கும் தந்திடுவேன் !
அற்புதம் தான் கவிஞன்நிலை
    அதனால் கவிதை எழுதுகிறேன் !

வார்த்தைக் குள்ளே தீமூட்டி
    வாழ்நாள் குளிரில் காய்ந்திடவும்
பார்க்குள் அந்த நெருப்பாலே
    பார்க்க ஒளிதான் செய்திடவும்
ஈர்க்கும் எதையும் நானெழுதி
    இன்பம் பெற்றுத் தந்திடவும்
யார்க்கும் ஞானம் சேர்ந்திடவும்
    யாண்டும் கவிதை எழுதுகிறேன் !

புனலைப் பார்த்தால் புதுக்கவிதை
    புரண்டு புரண்டு வந்தணைக்கும்
கனியை இலையை மரநிழலைக்
    கண்டு விட்டால் கவிதைவரும்
மனிதக் குற்றம் பார்த்திடிலோ
    மனத்துக் குள்பாத் தீமூளும்
இனியது அன்றோ இவையெல்லாம்
    இதற்குக் கவிதை எழுதுகிறேன் !

ஏன்நீர் மூச்சு விடுகின்றீர் ?
    ஏன்தான் உணவு கொள்கின்றீர் ?
ஏன்கண் மூடித் துயில்கின்றீர் ?
    எதற்காய் இதயம் துடிக்கிறதோ ?
ஏனேன் என்றே நான்கேட்டால்,
    எதுவாய் இருக்கும் உங்கள்பதில் ?
நானும் அதற்கே எழுதுகிறேன் !
    நாளும் கவிதை எழுதுகிறேன் !

-விவேக்பாரதி
25.06.2017

Popular Posts