சக்தித் திரி


கையிற் கரும்புடனே - அருட்
    கண்ணில் ஒளியுடனே
மெய்யில் நகையுடனே - உயிர்
    மெய்யின் சுடரெனவே
வையகச் சக்தியினாள் - இவண்
    வந்ததைக் காணுகையில்
தைய்யன தாவெனவே - கவிதை
    தத்திப் பெருகாதோ ?


அன்னங் கொடுப்பவளை - மனத்தின்
    அச்ச மறுப்பவளை
உன்னற் கெளியவளை - உயிருள்
    ஊறிக் கிடப்பவளை
மின்னற் சுவைகொடுத்தே - கொஞ்சமாய்
    மிரள வைப்பவளை
என்றும் பணிவமெனில் - நம்முளே
    ஏற்றம் வளராதோ ?

பாதி நிலாவுடுத்தி - அருளைப்
    பார்வை தனிலிருத்தி
ஆதிப் பரம்பொருளாய் - புதுமை
    ஆறு கரத்தினளாய்
காதல் வளர்த்திடுவாள் - அம்மா
    காமேஸ் வரியவளை
ஓதிப் புகழ்வமெனில் - நம்முள்
    ஒழுக்கம் நேராதோ ?

சக்தி ஒருமையினாள் - பல
    சாற்றும் வகைமையினாள் !
முக்தி தருமுனமே - நமை
    முயல வைத்திடுவாள் !
சக்தி நெருப்பாவாள் - அதில்
    சாந்தம் பிறக்குமடா !
பக்தி திரியாயின் - அதில்
    பார்ப்ப திவளுருவே !!

-விவேக்பாரதி
25.07.2017

Popular Posts