தமிழ்த்தொழுகை


தொழுதால்நான் தமிழ்த்தாயைத் தொழவேண்டும்! - புதுத்
   தோரணமாய் அவள்புகழை நடவேண்டும் - இனி 
அழுதாலும் தமிழில்தான் அழவேண்டும் - அந்த
   ஆனந்தம் போல்மண்ணில் எதுவேண்டும்? - வந்து
முழுதாக எனைவார்த்த செந்தமிழே - நாவை
   முத்துரத மாக்கிவைத்த முத்தமிழே - உன்னை
மொழியாகக் கொண்டதலால் இச்சிறுவன் - எந்த
   முக்தியையும் பெற்றதில்லை வான்தமிழே!

பாரதியின் பாட்டுவழி உள்வந்தாய் - அந்தப்
   பாட்டமுதம் வழியென்னுள் கள்தந்தாய் - ஒரு
காரணமில் லாமலுயர் பொன்தந்தாய் - ஆ
   ககனத்தைக் கைசேர்க்கும் கவிதந்தாய் - உனைச்
சாரதியாய் நான்கொண்ட தேதிமுதல் - உமை
   சன்னிதிக்கு மட்டுந்தான் கால்பயணம் - மீதி
நேரமெல்லாம் நீயோட்டும் வெள்ளிரதம் - இது
   நேர்ந்துவிட நான்செய்த தென்னதவம்?

தொட்டாலே பொன்னாக்கும் வித்தையினை - எனைத்
   தொடாமலே தந்தபுதுச் சித்திரமே - விழி
பட்டாலே பாடுகின்ற பாவலனாய் - உயர் 
   பாதைமாற்றி விட்டதொரு பெட்டகமே - இனி
கெட்டாலும் கவலையிலை நீகாப்பாய் - நான்
   கேட்டதெலாம் உமைகொடுக்கக் கவிசேர்ப்பாய் - நீ
சுட்டாலும் சுகம்சேர்க்கும் காலைவெயில் - உன்
   சுருதிக்கு நானாடும் காட்டுமயில்!!


-விவேக்பாரதி
27.01.2019

Comments

Popular Posts