வேதனைக் கிளிக்கண்ணி


https://www.deviantart.com/toonzy/art
 
ஞான மரக்கிளையில்
   நன்றாய் அமர்ந்தபடி
வானம் ரசிப்பாயடி - கிளியே
   வேதனை நீகேளடி!

வந்தாரை வாழவைத்து
   விருந்தோம்பும் தமிழ்நாட்டில்
சிந்தனை திரிந்தாரடி - கிளியே
   சிறப்பை இழந்தாரடி!

வாரீரென் றுபசரித்தோர்
   வாழ்ந்த தமிழ்ச்சமுகம்
சீரினை மறந்தாரடி - கிளியே
   சீ!என நினைப்பாயடி! (ஞான)

அன்புக் கரம்நீட்டி
   ஆதரித்த தமிழரெலாம்
வம்புக்குள் வீழ்ந்தாரடி - கிளியே
   வளமை துறந்தாரடி!

போருக்கும் நீதிசெய்து
   பொலிந்த தமிழரிங்கு
நேருக்கு மாறாகினார் - கிளியே
   நீயிதைச் சிரிப்பாயடி! (ஞான)

வந்த கதைமறந்து
   வாலாட்டி விளம்பரம்பால்
மந்தையென் றலைந்தாரடி - கிளியே
   மானமும் களைந்தாரடி!

மெய்ப்பொருள் அறிவதெனும்
   மேனிலை தான்மறந்து
பொய்ப்பொருள் பிடித்தாரடி - கிளியே
   பொழுதுக்கும் துடிப்பாரடி! (ஞான)

கண்ணிரண்டையும் மூடி
   காட்சியில் குற்றமென்று
புண்களை மொழிவாரடி - கிளியே
   பூ!எனச் சிரிப்பாயடி!

நன்றெது தீதெது
   நாடறியும்! பிரிவை
வென்றுநாம் உயர்வோமடி - கிளியே
   வாய்மையை மறவாதேடி!! (ஞான)


-விவேக்பாரதி
27.01.2019

Comments

Popular Posts