உள்ளம் என்பதோர் பூனை

 
உள்ள மென்பதோர் பூனையடா - அது
    உரசித் திரிவதே வேலையடா
உள்ளி ருக்குதோ வெளியி ருக்குதோ
    உணருவார் அதிகம் இல்லையடா!


நாம் வளர்க்கிறோம் என்பதையே - பல
    நாள் மறந்திடும் பிறவியடா!
ஆம் நமக்குளே அதுதன் ஆட்சியை
    அமைத்து வாழ்கின்ற பிராணியடா! (உள்ளம்)

சொகுசுக் காகவே வாழுமடா! - அது
    சுவையி லாததைச் சாடுமடா!
நகத்தில் கீறலும் கடிகள் நூறுமாய்
    நம்மைக் காயமே செய்யுமடா! (உள்ளம்)

அந்தப் பூனையைக் கொஞ்சுவதும் - நீ
    ஆவ தில்லையெனத் தள்ளுவதும்
நந்தம் கைகளில் இல்லை! யாவையும்
    நாயகன் செயும் ஆட்டமடா! (உள்ளம்)

காலி டுக்கிலே சுற்றுவதும் - ஒரு
    கதையி லாமலே கத்துவதும்
வாலை ஆட்டியே பற்றுவ தும்நம்
    வாழ்க்கை நாடகத் தங்கமடா! (உள்ளம்)

காலம் என்கிற வீட்டினிலே - சதி
    காரப் பூனையும் குடித்தனமாம்!
ஓலம் இட்டாலும் ஓய்வெடுத்தாலும்
    உள்ளம் இல்லாமல் வெற்றிடமாம்!

அடப்போடா!
உள்ளம் என்பதோர் பூனையடா!!

-விவேக்பாரதி
19.02.2019

Comments

Popular Posts