காலை நடை

நடக்க நடக்க நீண்டிடும் சாலை
    நடுவில் எத்தனை நிறுத்தங்கள்!
நாடிய சிலவும் வேண்டிய சிலவும்
    நகர்ந்து போகும் வழக்கங்கள்!
வெடித்த சாலை வெண்ணீர்ப் பாலை
    வேகக் காற்றும் இடையிடையே
மெலிந்த தென்றல் சோலைக் காட்சி
    மெதுவாய்ப் படரும் வழிவழியே!


பூவின் வாசம் ஓரிடத் தில்நான்
    புயல்வ சத்தில் ஓரிடத்தில்
புன்னகை மட்டும் மாறா மல்நான்
    புரியும் நடைதான் யாரிடத்தில்?
தாவும் குரங்காய் மனமும் செல்லத்
    தண்ணீர் தேடும் நிமிடங்கள்
தடித்துப் புடைக்க உண்டக ளைப்பில்
    தடுமா றுகிற பயணங்கள்!

முதுகு வளைய மூட்டை தூக்கி
    முறுவ லிப்பதும் நானேதான்
முடியா தெனவென் மனத்துச் சுமையால்
    முனகி நிற்பதும் நானேதான்
அதுவாய் வந்தோர் தனிவே தாளம்
    அழுத்திக் கட்டிப் பிடிக்கிறது
ஆயிரம் கதைகள் கேட்டுக் கேட்டே
    அழுகைக் கவிதை கொடுக்கிறது!!

-விவேக்பாரதி
11.02.2019

Comments

Popular Posts