மாறும் திருடர்கள்
கூட்டங் கூடி கோஷம் போட்டுக்
குலவி நாளும் வேஷம் போட்டுக்
கூத்தடித்து வாழ்வோர் பலருண்டு - நெல்லின்
கூடவே வளர்ந்தவிஷத் தண்டு ! - வாழ்வில்
குணமி லாதவர் மனமி லாதவர்
குறியி லாதவர் நெறியி லாதவர்
கூட்டமாய் இருக்குமிடம் கண்டு - வந்து
குட்டையைக் குழப்புவதும் உண்டு!
வேட்டி மீது கரைகள் கொண்டு!
வெற்று போக்கில் நாட்கள் கொண்டு
வேதனை அளிப்பவர்கள் கோடி -உண்மை
வெல்வதைத் தடுப்பவர்கள் பேடி - வெறும்
வெறியி லோடுவர் குறையி லாடுவர்
வெறுமை பாடுவர் பழியி லூடுவர்
வேறுவேறு பொய்கள் சொல்லியாடி - என்றும்
வேற்றுமை வளர்ப்பார்விழி மூடி!
உண்மை தன்னை மண்ணில் விட்டுப்
பொய்மைப் பேச்சை மட்டுந் தொட்டு
உண்மைபோல் உரைப்பார்களை நம்பி - இந்த
உலகம்போகும் தலைவாவென எம்பி - அவர்
உள்ள மெங்கிலும் கள்ள வஞ்சனை
நெஞ்ச மன்றினில் நஞ்சு சிந்தனை
உன்னதம்போல் பேச்சளப்பார் தம்பி - நம்பி
ஊமையானால் நெஞ்சம்படும் வெம்பி!
மண்ண கத்தைத் தின்று தீர்த்து
விண்ண கத்தைத் தின்னப் பார்த்து
மனதினுக்குள் வைப்பார் பேராசை - சுற்றி
மதியிலாதோர் கோஷமிடும் ஓசை - நாட்டின்
மங்க லங்களை நிந்தை செய்பவர்
பொங்கும் வன்முறை தங்க வைப்பவர்
மாறிமாறித் திருடவருவார் காசை - ஊழல்
மக்கள்முன் விதைப்பாரந்த மாசை!!
#கைகளிலே_தனுவுண்டு
-விவேக்பாரதி
23.02.2019
Excellent vivek
ReplyDeleteமிக்க நன்றி
Delete