நினைவுறுத்தல்
அண்ணா(து) உயரே பார்க்கின்றேன்
அங்கே நகரும் மேகங்கள்
உண்மை ஒன்றை நினைவுறுத்தும் - இன்னும்
உயரே இருப்ப(து) என்னிலக்கு!
உண்மை ஒன்றை நினைவுறுத்தும் - இன்னும்
உயரே இருப்ப(து) என்னிலக்கு!
கொஞ்சம் குணிந்தும் பார்க்கின்றேன்
குதிக்கும் கடலின் மீனெல்லாம்
நெஞ்சுக் குள்ளே நினைவுறுத்தும் - இன்னும்
நெருங்கா(து) இருக்கும் என்னாழம்!
குதிக்கும் கடலின் மீனெல்லாம்
நெஞ்சுக் குள்ளே நினைவுறுத்தும் - இன்னும்
நெருங்கா(து) இருக்கும் என்னாழம்!
காற்றின் தீண்டல் பார்க்கின்றேன்
கன்னம் தொட்டுச் செல்லுமது
மாற்றா(து) ஒன்றே நினைவுறுத்தும் - இன்னும்
வாடா(து) ஓட வேண்டுமென!
கன்னம் தொட்டுச் செல்லுமது
மாற்றா(து) ஒன்றே நினைவுறுத்தும் - இன்னும்
வாடா(து) ஓட வேண்டுமென!
விதையை எடுத்துக் கண்பார்ப்பேன்
மண்ணில் விழும்முன் அந்தவிதை
கதையாய் ஒன்றை நினைவுறுத்தும் - இன்னும்
காத்திருத்தல் வேண்டுமென!
மண்ணில் விழும்முன் அந்தவிதை
கதையாய் ஒன்றை நினைவுறுத்தும் - இன்னும்
காத்திருத்தல் வேண்டுமென!
மூங்கில் ஒன்றைப் பார்க்கின்றேன்
முள் கொண்டாலும் வெட்டுகளை
ஏந்தும் அதுதான் நினைவுறுத்தும் - காயம்
ஏற ஏற இசைபிறக்கும்!
முள் கொண்டாலும் வெட்டுகளை
ஏந்தும் அதுதான் நினைவுறுத்தும் - காயம்
ஏற ஏற இசைபிறக்கும்!
சிப்பி பொறுக்கிப் பார்க்கின்றேன்
செரித்த முத்தைக் கொண்டவது
தாப்பா(து) ஒன்றை நினைவுறுத்தும் - எதையும்
தனதென்றாக்கும் வித்தையது
செரித்த முத்தைக் கொண்டவது
தாப்பா(து) ஒன்றை நினைவுறுத்தும் - எதையும்
தனதென்றாக்கும் வித்தையது
பார்ப்ப(து) எல்லாம் ஒன்றொன்றாய்ப்
பாடம் சொல்லும் பொழுதில்,அதைச்
சேர்க்கும் முன்என் நினைவுறுத்தல் - வந்து
சரியாய் என்றன் முன்னிற்கும்
பாடம் சொல்லும் பொழுதில்,அதைச்
சேர்க்கும் முன்என் நினைவுறுத்தல் - வந்து
சரியாய் என்றன் முன்னிற்கும்
எல்லாம் உனக்கு விளங்கியதா
என்றே என்னை முன்கேட்கும்
சொல்லால் திருப்பிச் சொல்லுமுனம் - நெஞ்சம்
சோம்பலுக்குள் சென்றொளியும்!
என்றே என்னை முன்கேட்கும்
சொல்லால் திருப்பிச் சொல்லுமுனம் - நெஞ்சம்
சோம்பலுக்குள் சென்றொளியும்!
மீண்டும் உடலம் மனிதரைப்போல்
மீளாக் காலச் சுழலாழ்ந்து
வேண்டும் யாவும் பொருளென்றே - கொண்ட
வேகம் எல்லாம் இழந்தழியும்!
மீளாக் காலச் சுழலாழ்ந்து
வேண்டும் யாவும் பொருளென்றே - கொண்ட
வேகம் எல்லாம் இழந்தழியும்!
தினமும் பாடம் நடக்கிறது
தினமும் நெஞ்சம் மறக்கிறது
தினமும் உடலம் உழைக்கிறது - ஆனால்
திருந்தாமல் கவி பிறக்கிறது!!
தினமும் நெஞ்சம் மறக்கிறது
தினமும் உடலம் உழைக்கிறது - ஆனால்
திருந்தாமல் கவி பிறக்கிறது!!
-விவேக்பாரதி
03.04.2023 | இரவு 11.40
03.04.2023 | இரவு 11.40
Comments
Post a Comment