உழைக்கும் மக்களைப் பாடுகிறேன்
உழைக்கும் மக்களைப் பாடுகிறேன் - அவர்
உதவிக் கரங்களை வாழ்த்துகிறேன்
தழைக்கும் உலகம் உயர்ந்துவிட - அது
தரமாய் பலமாய் வளர்ந்துவிட
தங்கள் உழைப்பை எரிபொரு ளாகத்
தரும்தோ ழர்களை வாழ்த்துகிறேன் - அவர்
தர்மம் செழிக்கப் பாடுகிறேன்!
காட்டைத் திருத்திப் பதமாக்கி - அதில்
கலைசெய் கின்ற உழவர்களை
கரும்பு சோளம் பழவகை எல்லாம்
கைமேல் கொடுக்கும் மனிதர்களை - பசுங்
காடு வளர்க்கும் தெய்வங்களை
நாட்டைக் காக்க எல்லையிலே - பல
நாளாய் நிற்கும் வீரர்களை
நாட்டுக் குள்ளே நலம்வ ளர்க்கும்
நாய கர்களை வாழ்த்துகிறேன் - பெரும்
நன்றிகள் சொல்லிப் பாடுகிறேன்! (உழைக்கும்)
கடலில் மூழ்கி முத்தெடுத்து - தினம்
கரையில் காய்ந்தும் உப்பெடுத்து
கண்துஞ் சாமல் மனமஞ் சாமல்
காவல் செய்யும் பொறுப்பெடுத்து - அதில்
கருத்தாய் இருந்தே உயிர்வளர்த்து
உடலில் தோன்றும் நோய்களைந்து - மன
உறுதி கொடுக்கும் சொல்புகன்று
உறுதுணை யாக வாழ்வில் சேரும்
ஒவ்வொரு வரையும் வாழ்த்துகிறேன் - அவ்
உயிர்கள் வாழப் பாடுகிறேன்! (உழைக்கும்)
தோள்கள் என்னும் தொழிற்சாலை - அவை
தொடுமிட மெல்லாம் மலர்ச்சோலை
தோன்றும் உயரம் யாவும் மனிதன்
தொட்டுப் பிடித்த உயர்வேலை - அதை
தொடரும் நண்பரைப் பாடுகிறேன்
வாள்கள் கொண்டு முன்னோர்கள் - மிக
வளர்த்த நாட்டை உழைப்பாலே
வாழ்விக் கின்ற வள்ளல் அவரை
வாயால் தினமும் வாழ்த்துகிறேன் - அவர்
வாழ்க வாழ்கெனப் பாடுகிறேன்!! (உழைக்கும்)
-விவேக்பாரதி
01.05.2021
சிறப்பு
ReplyDeleteJeetha rho
ReplyDeleteJeetha rho
ReplyDelete