கோவை இனிப்பு
கோவைப் பனிக்காற்று - மனத்தைக்
கொண்டு பறக்கிறது!
தாவும் நெஞ்சுக்குள்ளே - அதுபோய்
தண்ணீர் நிறைக்கிறது!
சீவும் குளிர்மௌனம் - தலையில்
சில்லென் றடிக்கிறது!
நாவில் அவள்நாமம் - எழுந்தே
நாளைக் கொடுக்கிறது!
அன்பர் கூட்டங்களும் - அவர்
அகத்தின் ஈட்டங்களும்
துன்பம் துறத்திடவே - வந்து
தூய்மை நிறைக்கிறது!
இன்பம் கிடைக்குமிடம் - என
இயம்பும் இக்கோவை
தெம்பைக் கொடுக்கிறது - ஒரு
தெளிவு கிடைக்கிறது!
காலைப் பொழுதிலெல்லாம் - ஒரு
கவிதை உதிப்பதில்லை
சாலை சாளரங்கள் - கவி
சாற்றிக் கொடுப்பதில்லை
நீல வானத்திலே - அவள்
நீவிய செந்நிறத்தின்
ஜ்வாலையைக் காண்கையிலே - மனம்
ஜாதி மறக்கிறது!
பறவை ஆகிறது - மனம்
பாடல் இசைக்கிறது
உறவை நாடியது - தனியாய்
உயரம் காண்கிறது
நிறத்தின் ஓடையிலே - அதுபோய்
நீந்திக் களிக்கிறது
மறந்த மனிதமனம் - உயரே
மகிழ்ந்து சிரிக்கிறது!
கோவையின் காலைமணம் - கவிதை
கொண்டு கொடுக்கிறது
கோவைப் பனிமூட்டம் - மனத்தைக்
கோபுரம் ஆக்கியது
கோவைக் கலையழகு - அழகுக்
கொலுவை வைக்கிறது!
கோவை இனிக்கிறது - அதுதான்
கொள்ளை அடிக்கிறது!!
-விவேக்பாரதி
11.02.2018
Comments
Post a Comment