நெஞ்சம் சிப்பி


ஒரு தெருவோரம் விழிகளில் ஈரம்
ஓலம் நெஞ்சில் ஓயா தாடும்
சிறுநிழல் தேடிச் சிதைவுறும் நேரம்
சிவனின் சடைமுடி சிலிர்ப்பது கண்டேன்!


மலையடி வாரம் மலரென நானும்
மார்புற வேண்டி மயங்கிக் கிடந்தேன்
மலைமகள் நாதன் அருகினில் வந்தான்
மல்லிகை மாலையைக் கையில் எடுத்தான்!

கையில் எடுத்துக் கவிதை கொடுத்துக்
கடைவிழி அருளால் கனலைப் பதித்து
மெய்யில் இருக்கும் பொய்மை களைந்து
மேலவன் ஈசன் மேல்கீழ் பார்த்தான்

பொம்மையைப் போல பொலிவுற நின்றேன்!
போயின கவலை! போயின துன்பம்!
அம்மையைப் பாதி அகத்தினில் கொண்ட
அனல்விழி நாதன் அருகில் தெரிந்தான்!

சிவசிவ சங்கர சிவவெனச் சொன்னேன்
சிரித்தவன் நெஞ்சச் சிப்பில் தங்கிக்
திவலையென் றாகித் தினமொரு படிவம்
திமிரிட மூடி முத்தா கின்றான்!!

-விவேக்பாரதி
14.02.2018

Comments

Popular Posts