நெல்லுக்கிரைத்த நீர் | மார்கழிக் கோலம்
ஆதியந்தம் அற்றஜோதி அண்டமே அளந்தமேனி
அற்பனென்றன் நெஞ்சொடுங்கி நின்றதென்னவோ - வந்து
பாதிதோன்றி பின்மறைந்து நாளெலாமும் தேடவிட்டுப்
பார்த்திருந்து புன்னகைக்கும் லீலை என்னவோ?
தீதுநன்று செய்யுமையன் திசையையே அணிந்தமெய்யன்
சிற்றெறும்பின் மீதுவெல்லம் வைத்த தென்னவோ - அதை
மோதிமோதித் தின்னப்பார்த்து முற்றிலும் சலித்தபோதும்
முந்திவந்து காத்திடாத தொந்தம் என்னவோ?
சூலமேந்தி நின்றகையன் சுடரையே திணித்தகண்ணன்
சூழுமென்றன் பாவமூட்டை வந்தெரிப்பனோ? - இல்லைக்
காலமென்னைப் பந்தடிக்கும் நேரமட்டும் காத்திருந்து
காலில்வீழ்ந்து தொட்டபின்னர் கைகொடுப்பனோ?
ஆலமேந்தும் நீலகண்டன் ஆடியே கிடக்குமுண்டன்
அறிவிலாத பித்தனென்னைக் ஏங்க வைப்பனோ? - கண்ணில்
தூலமாகி சூட்சுமத்தின் மூலமாகி மாயம்செய்து
துணைக்கிருந்தும் தூரநின்று நோகடிப்பனோ?
காளையேறு கின்றமன்னன் காற்றிலே பறந்துவந்து
கவலையேறு மென்னைச்சற்றுக் கனிய வைப்பனோ - என்றும்
நாளையே நினைத்துநொந்து நாளெலாம் உழைத்துவெந்து
நானொதுங்கும் நீழல்பார்த்து காத்து நிற்பனோ!
தாகமாய் அலைந்தலைந்து யூகமாய் நடந்தளந்து
சார்ந்திடும் குளக்கரைக்கு காவல் செய்வனோ - இல்லை
மேகமாய் மிதந்துவந்து நீரினிலே நனைத்துவிட்டு
மேலுமென் றழைக்கும்போது தீர்ந்திருப்பனோ
கேள்வியான நெஞ்சகத்தை வேள்வித்தீயிலே உருக்கி
கேட்டவண்ணம் கேட்டதை நடத்தி வைப்பனோ - வினைத்
தேள்விடம் பதிந்தகள்வன் போலநானும் வாய்புதைக்கும்
தேதிபார்த்து நோவுதீர தேன் கொடுப்பனோ??
ஆசையாவும் உள்ளொலிக்க ஓசையோடு கவிபிறக்க
ஆதிசித்தன் மீளும்நாளைப் பார்த்திருக்கிறேன்! - இங்கு
பூசையே நமக்குப்பாடல் புண்ணியம் நமக்குவேலை
பூழ்திபட்ட தோளுலுக்கி வேலை செய்கிறேன்! - நீர்
புல்லில்பாயும் நாளுக்காக நெல் வளர்க்கிறேன்!!
-விவேக்பாரதி
17 டிசம்பர் 2022
Comments
Post a Comment