நானெனும் பொய்


நானெனும் நாடகம் எத்தனைநாள்? - இந்த
    நானிலம் மீதினில் என்னகதை?
வானெனும் மேடையின் கீழ்நடக்கும் - என்
    வாழ்க்கையின் நாடகம் என்னவிலை?
மானிடனாய் இச் சென்மத்திலே - நான்
    வந்ததும் ஆதியின் காலவினை
ஏனெதற்(கு) என்கிற கேள்வியிலே - வழி
    ஏறி நடத்திடும் கால்களெனை!

கருக்குடம் வாழ்கையில் சிசுவெனும்பேர் - கண்
    கண்டபின்னால் எனைக் குழந்தையென்றார்
தெருக்களில் திரிகையில் பாலகன்நான் - மதி
    தேறி அமர்கையில் மாணவனாம்
உருக்கொள இளமையின் புகழெனக்கு - உடன்
    ஊழியன், தோழமை பட்டங்களாம்
சுருக்குகள் மேல்வர கிழவனென்றும் - பின்
    சுடலையில் ஓர்பிடி சாம்பலென்றும்

எத்தனை எத்தனை பெயரெனக்கு - இதில்
    எதுதான் நான்?எது மெய்க்கணக்கு?
வித்தகம் நானா விளைபொருளா - கொளும்
    விதிகளில் நானா மீறலிலா?
மத்தகம் உடைந்த காலமெனும் - கரி
    மீதினில் நானமர்ந்தோடுகிறேன்
வித்தினை ஒருத்தி விதைத்துவிட்டாள் - பலர்
    வீணே எடுத்தெடுத்(து) ஆயுகிறார்!

காதினில் ஓர்குரல் கேட்கிறது - அது
    கதிதரும் குரலெனத் தெரிகிறது
காதலில் உட்புறம் திரும்புகையில் - ஒரு
    காரிருள் மட்டுமே விரிகிறது!
வேதங்கள் சொல்வது நானெனும்பொய் - என்
    வேஷங்கள் சொல்வதும் நானெனில்பொய் - இதில்
மீதமிருப்பது தெய்வதமாம் - அதுவும்
    மெய்யிலை பொய்யெனில் என்னசெய்வேன்?

-விவேக்பாரதி
22-11-2022

Comments

Popular Posts