சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்


சந்தவசந்தம் குழுமத்தில் பாரதியாரின் நூற்றாண்டு நினைவை ஒட்டி நடத்தப்பட்ட கவியரங்கில் படைத்த கவிதை... 

சொல்லக் கொதிக்குதடா - மனம் 
சோர்வினில் வீழுதடா - கரம் 
கொல்லத் துடிக்குதடா - நெஞ்சில்
கோபத்தீ மூளுதடா!

சின்னஞ் சிறுவர்களை - ஒரு 
சித்திரம் நேருடலை - எழில்
மின்மினிப் பூச்சிகளை - ஒளிர் 
மின்னலின் கீற்றுகளை

பிஞ்சுப் பசுமைகளை - மண்ணில் 
பிறை மதியங்களை - இறை 
கொஞ்சும் மனதுகளை - பயம் 
கொள்ளாத கன்றுகளை 

காமத்தின் ஆசையினால் - வெறும் 
காயத்தின் இச்சையினால் - ஒரு 
மாமிசம்போல் சுவைக்கும் - கெட்ட 
மனித மிருகங்களை 

சொல்லக் கொதிக்குதடா - கரம் 
கொல்லத் துடிக்குதடா! 

வேலி இடத்திலுளான் - பயிர் 
மேயும் கதைபடித்தோம் - தாய்க்குத்
தாலி கொடுத்தவனே - மகள் 
தன்னைத் தொடுதல்கேட்டோம் 

பக்கத் திருப்பவரே - வீட்டுப் 
பாவை விளக்கணைக்க - அவள்
துக்கத்தில் மூச்சுவிட - எனத் 
துயர்களை நேரில்கண்டோம்

இத்தகு பாவிகளை - உள்ளில்
இரக்கமில்லாதவரை - வெறும் 
செத்தைக் குணத்தரவைத் - தினம் 
செய்திகளின் வழியே 

சொல்லக் கொதிக்குதடா - கரம் 
கொல்லத் துடிக்குதடா! 

பெண்மையைத் தெய்வமென - தினமும் 
பேச்சுகள் பேசுகிறோம் - எனில் 
உண்மையில் உள்மனதில் - வளரும் 
உறுத்தல் தணிப்பதில்லை 

மோகத்தைக் கொல்வதில்லை - அதனால் 
முற்றும் செயல்மறந்து - பெண்கள் 
தேகத்தை நச்சுகிறோம் - அதனால்
தேசு மழுங்குகிறோம்! 

பசியில் துடிப்பவனாய் - சிலபேர் 
பார்த்ததெல்லாம் சுவைப்பார் - அதில் 
ருசிகள் பழகிவிட்டால் - அம்மம்மா
சுவைகள் விரும்புகிறார் 

இன்பம் நமக்கெனினும் - பிறர்க்கு 
இம்சை வளருமெனில் - அந்தத் 
துன்பச் செயல்விடுப்போம் - அதில் 
தூய ஒளிபிறக்கும் 

கண்ணை உணர்ச்சியெனும் - பெரும் 
காட்டுத் திரைமறைத்தால் -  இறை 
உண்மை பிறகொருநாள் - பதில் 
உரக்கக் கேட்டுநிற்கும் 

வன்மைச் செயல்விடுப்போம் - பிறர் 
வாழக் கரம்கொடுப்போம் - இது 
மென்மை திகழுலகம் - மன 
மேன்மை இதில்வெல்லுமே!! 

-விவேக்பாரதி 
15.10.2021 

Comments

Popular Posts