சொல்லுக்குள் என்ன

https://soundcloud.com/vivekbharathi/cmovfnvnsnqb

புல்லாங்குழலா? புரியா அனலா? என்
சொல்லுக்குள் என்ன? அது
சொல்லுங் கதையென்ன?
தென்றல் மணமா? தேங்காச் சுனையா?
எண்ணங்கள் என்ன? அவை
ஏறும் நிலையென்ன? 

காலைப் போதில் வெண்ணில வாகிக்
    கண்கள் சிமிட்டுவதும்,
காற்றாய்த் தீண்டிக் கடலாய் வருடிக்
    காலம் கழிப்பதும்,
மாலை வானின் மஞ்சள் பூச்சை
    மனத்தில் இழைப்பதும்,
மழை மின்னல்கள் வான வில்களை
    மாற்றிக் குழைப்பதும்,

என்ன?
புல்லாங்குழலா? புரியா அனலா? என்
சொல்லுக்குள் என்ன? 

ஆலய மணிகள் ஆடும் சதங்கை
    அகத்தில் கேட்பதும்,
அண்டம் பிண்டம் அணுவின் துண்டம்
    அறிவுள் பூப்பதும்,
ஓலைகள் அறியாப் பாமரம் போல
    ஓய்ந்து கிடப்பதும்,
ஒற்றைப் பொறியில் உயிர்கொள் சுடரை
    உயிரில் சுமப்பதும், 

என்ன?
புல்லாங்குழலா? புரியா அனலா? என்
சொல்லுக்குள் என்ன? 

பள்ளம் மேடு பளிங்கை மேகம்
    பார்த்தா பொழிகிறது?
பாடல் எதிலே எப்படி உதிக்கும்?
    பனியா தெரிகிறது?
உள்ளம் கிணறு உற்றுப் பார்த்தால்
    உணர்ச்சி பூதங்கள்
ஒவ்வொரு கர்ஜனை ஒவ்வொரு சிந்தனை
    உறுமும் பாடல்கள்....

என்ன?
புல்லாங்குழலா? புரியா அனலா? என்
சொல்லுக்குள் என்ன? அது
சொல்லுங் கதையென்ன?
தென்றல் மணமா? தேங்காச் சுனையா?
எண்ணங்கள் என்ன? அவை
ஏறும் நிலையென்ன? 

-விவேக்பாரதி
31.05.2018

Comments

Popular Posts