வேண்டா மனம்

சத்தியம் சொல்லிடு வாயா? - மனம்
   சல்லாபக் கட்டினிற் சிக்குறும் பேயா?
நித்தமும் ஆடுவ தென்ன? - இது
   நீட்டி முழக்கிடும் விண்ணப்பம் என்ன?

சொல்லடி சொல்லடி காளி! - இதன்
   சோதனை யாலுளம் எங்கணும் ஊழி!
நில்லடி நில்லடி காளி - என்
   நினைவினில் ஏறிநீ கொல்லடி காளி!

ஒன்றை வெறுத்திடச் சொல்லும் - மற்
   றொன்றை நினைத்து மருண்டது செல்லும்
நன்றைப் பிரிந்துப்பின் கூடி - இது
   நாளும் நடித்திடும் நாடகப் பேடி!

நேற்றை நினைப்பது வாழ்வா? - நாளை
   நேர்வதை எண்ணி நடப்பது வாழ்வா?
ஏற்றது மேதெனச் சொல்வாய்! - மனம்
   என்றும் நிகழ்த்தும் பகைதனைக் கொல்வாய்!

மாய மனமின்னும் வேண்டா - அது
   மாற்றி மாற்றிச்செயும் செய்கையும் வேண்டா
தாய்நின் அருட்பதம் போதும் - அதைத்
   தாங்கிவிட் டாலினி ஏதுண்டு சேதம்?

-விவேக்பாரதி
16.10.2017

Comments

Popular Posts