வினைதீர்க்க விரைந்தோடி வா
வினைதீர்க்க விரைந்தோடி வா - நெஞ்சில்
வீரத்தை ஞானத்தைக் கருவாக்கி வா
முனைநோக்கி நீயோடி வா - நாட்டின்
மையத்தைக் காக்கும் முனைப்போடு வா
காலங்கள் உன்றன் வசம் - செய்யும்
கடமைகள் உரிமைகள் உன்கை வசம்
ஜாலங்கள் உன்கண் வசம் - இன்னும்
சந்தேகம் என்னவோ நீயோடி வா
வந்தாலே போதும் விழா - நீயும்
வழுவற்ற தேய்வற்ற புதுவெண்ணிலா
தந்தாலே போதும் கரம் - பின்னர்
தரமுண்டு பலமுண்டு இதுவே வரம்!
பிரிவுக்குள் சிக்கி டாதே - உண்டு
பிழைப்போரின் கூட்டத்துள் நின்றிடாதே
சரிவுக்கும் ஏற்றமுண்டு - குறியைச்
சரியாக்கு நம்நெஞ்சில் மாற்றமுண்டு!
பொய்சொல்லி ஆள்வார் தலை - வெற்றுப்
புறம்சொல்லி எப்போதும் ஆவார் சிலை
கைசொல்லி தலை கேட்பதா? - உன்றன்
கடமைகள் செய்யாமல் நீ தோற்பதா?
வேறு
வலுவற்ற மூங்கில்கள் நிற்பதில்லை - எந்த
வன்காற்றும் புல்லை அறுப்பதில்லை
மலர்கொய்யும் போதிலும் அழுவதில்லை - வெல்லும்
மனம்கொண்டு வினைசெய்ய விழுவதில்லை!
உலகத்து நீதிகள் நமக்காகவே - வாழும்
உயிரெலாம் ஏங்குதோர் தலைக்காகவே
சிலர்வாழப் பலர்வீழ இதுநியாயமா? - வினை
சரியாய் நடந்தேற முன்னேறிவா!!
-விவேக்பாரதி
01.08.2018