சிறைபட்ட நெஞ்சு
அழுத்தும் நிலையில் நானில்லை
ஐயோ நிலவே சிரிக்காதே - உடன்
அழுதற் கிங்கே இடமில்லை
மையாள் விழிமேல் மையலுடன் - அவள்
மனதைத் திருடும் ஆசையுடன்
பைய நுழைந்தேன் அதுவுண்மை - அவள்
பட்டாள் சிறையில் அதுவுண்மை!
தொடுதிரைப் பேசி தொட்டபடி - நீ
தொலைந்து போவாய் கொடுமிரவே
விடுகதை விழியை நினைந்தபடி - நான்
விம்மி அழுவேன் கொடுமிரவே
அடுத்தினி காலம் உடன்மாறும் - என்
ஆனந் தங்கள் எனக்காகும்
விடுதலை ஒருநாள் வரமாகும் - நீ
விரைந்து நகர்வாய் கொடுமிரவே!
அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு - என்
ஆதியும் அந்தமும் அவள்கணக்கு!
கவலைகள் நெஞ்சில் கலந்திருக்கு - இக்
கவிதை தானே விஷமுறிப்பு!
அவதி படுத்தும் தனியிரவே - உன்
அழிவை என்மேல் மட்டும்பொழி
அவளை எதுவும் செய்யாதே - அவள்
அனிச்ச குணத்தாள் கொய்யாதே!
போப்போ இரவே! பகலேவா - என்
பொல்லா ஏக்கம் மாயட்டும்
போப்போ கனவே! ஒளியேவா - இப்
போக்குகள் எல்லாம் தீரட்டும்
போப்போ அழுகைத் துளியேபோ - இனி
புலம்பக் கூடச் சொல்லில்லை
போப்போ துயரே! விடிவேவா - என்
போதைக் காய்ச்சல் தெளியட்டும்!
மஞ்சந் தன்னில் என்னுடலம் - ஒரு
மரத்தைப் போலே எரிகிறது
கொஞ்சும் சொற்கள் கேட்காமல் - என்
கோபம் என்னை அடிக்கிறது!
நஞ்சைக் கலந்து மென்காற்று - பல
ஞாப கங்களைக் கொல்கிறது!
மிஞ்சும் உயிரும் அவளுக்காய்த் - தவம்
மின்னல் முனையில் செய்கிறது!
கொடுமை தாங்கும் அளவில்லை - இக்
கொள்ளை இரவின் முடிவெங்கே
படியும் பனியும் இருளும்போய் - மனம்
பார்க்கும் ஒளியின் களமெங்கே
விடியும் வரையில் போராட்டம் - அவள்
இல்லா இரவில் நீரோட்டம்
நொடிகள் எல்லாம் ஆண்டாகும் - என்
நெஞ்சே எனக்குக் கூண்டாகும்!!
-விவேக்பாரதி
11.08.2018