கள்ளக் கண்ணன்
சின்னச் சின்னக் கண்ணனுக்குச்
சிரித்திடும் கள்வனுக்கு
வண்ண வண்ண ராஜனுக்கு
வாலிபக் குமாரனுக்கு
வாழ்க்கைப் பட்டாலே வாதைகள் தீரும்
வாசல் முன்னாலே வசந்தம் வந்தேறும்...
உறிவெண்ணெய் திருடியவன் உயிரைத் திருடக் காத்திருந்தால்
பசுங்கன்றை வருடுபவன் பார்வைபடப் பார்த்திருந்தால்
உலகம் மறந்து போகுமடியோ! பெண்மை
உணர்வெழுந்து வேகுமடியோ!
அவனொரு கள்வனடி ஆசிரியன் நண்பனடி
அவனொரு தெய்வமடி அசட்டுக் குழந்தைச் செல்வனடி
அவன் புகழைச் சொல்லி நின்றாலோ....இந்த
அம்புலியும் பாடும் ஆலேலோ!
அர்ஜுனன் தயங்கியதும் கீதைதந்தான் பாதைசொன்னான்
பாஞ்சாலி கதறியதும் சேலைதந்தான் வாழ்வுதந்தான்
நமது சேலை உருவிக் கொண்டானே...அந்த
நாளைப் பார்த்து வழங்கிடத்தானே!
தென்றலை வரவழைத்துச் சேதிசொல்லிக் காத்திருப்போம்
அன்றிலைப் பாடச்சொல்லி அவன்சாயல் பார்த்திருப்போம்
யமுனையை விட்டுச் சென்றானே! நமது
யௌவனத்தைத் திருடிக் கொண்டானே....!!
-விவேக்பாரதி
18.06.2018
படம்: பிரியங்கா ரகுராமன்
Comments
Post a Comment