பிழைப் படி

நிதமொரு புயலதில் நீச்சல் போடும்
    நினைவொரு மலரென ஆடும் பாடும்
விதவித அனுபவம் நாளும் நேரும்
    விசித்திரம் அதுவரும் காலக் கோலம் !
எதுசரி எதுபிழை கவலை வேண்டா
    எதிர்வரும் அவைமதி அறியும் தானாய் !
புதிர்வரும் கதையிது வாழ்க்கை ஆகும்
    புதுவிதம் புதுமனம் நாளும் கூடும் !


கனவினில் நடப்பவை வாழ்க்கை இல்லை !
    கவிதையில் வருபவை சேர்க்கை இல்லை !
மனமெனும் குதிரையின் பின்னே ஓடும்
    மணமுடைப் பொழுதுகள் நாளும் வேண்டும் !
நினைவெனும் ஒருகுரல் தீண்டும் போதும்
    நிழலென அதுகரை தாண்டும் போதும்
வினையதை அடக்கிடக் கற்றல் வேண்டும் !
    விசையுடன் இருந்திடும் வழியே ஆகும் !

அறிவென ஒருகரம் நம்மைத் தாங்கும்
    அழகிய பருவமும் இடையில் தாங்கும்
மறதியும் நினைப்பதும் வாழ்க்கை ஆகும்
    மனமதன் எதிரினில் சண்டை செய்யும் !
நிறமென வகையெனப் பேதம் இல்லை
    நிலவினில் கறைவரும் அழகும் உண்டு !
பிறவியின் பயனதைத் தேடல் வேண்டும்
    பிழைகளைப் படியெனக் காணல் வேண்டும் !

 -விவேக்பாரதி
03.08.2017

Comments

Popular Posts