வடபழநி வசந்தம்
உகந்த மாதத்திலே
திருநாள் முருகனுக்கு - பண்டிகை
திசையெல்லாம் சிலிர்ப்பு!
அந்தத் திருநாளில் - அம்பிகை
அருளில் நிறைந்தவராம்
எங்கள் இசைக்கவியார் - என்றனை
அழைத்தார் நிகழ்ச்சிக்கு!
அழைத்த அந்தவிடம் - சென்னையில்
அழகு மிகுந்தவிடம்
பழகிய மாநகரில் - அதுவரை
பாராப் புதியவிடம்!
கடற்காற் றோடிவந்தே - பணிவுடன்
கந்தன் புயம்தழுவும்
வடபழநிக் கோயில் - அடியவர்
வாழும் திருக்கோயில்
உள்ளே நுழைந்தவனை - அற்புத
உரிமைச் சிரிப்புடனே
பிள்ளையார் வரவேற்றார் - சிறியவன்
பிரியத்துடன் தொழுதேன்!
அங்கதன் பின்புறத்தில் - அடடா
ஆலயம் கொண்டவெழில்
இங்கிந்தக் கவிதையிலே - அடியவன்
எப்படிச் சொல்லிடுவேன்!
செம்மைத் திருத்தலத்தில் - இசைக்கவி
செல்வாக் கிருந்ததனால்
அண்மையில் சென்றுவிட்டேன் - ஆண்டவன்
அருகில் அமர்ந்துகொண்டேன்!
கண்ணெதிரே முருகன் - தனியொரு
கம்பிரப் புன்னகையை
வண்ண இதழ்களிலே - அழகுடன்
வரைந்து நின்றிருந்தான்!
பக்தர்கள் பின்புலத்தில் - அரோகரா
பக்தியில் பாடிநிற்க
பக்கத்தில் நாதசுரம் - இசைகளின்
பந்தி நடந்திருக்க
மந்திரங்கள் ஒலிக்க - திருப்புகழ்
மங்களப் பாட்டிருக்க,
அந்த ஒருகணத்தில் - சிலையதன்
அழகுத் திருமுகத்தில்
தண்டாயுத பாணி - அவனது
தாமரை முகம்கண்டேன்
கண்ணீர் வழிந்திடவே - என்முனம்
கந்தன் உருக்கண்டேன்!
பார்த்துக் கண்ணசைத்தான் - அப்பப்பா
பரவசம் என்னசொல்வேன்
வேர்த்து வேர்த்துவழிய - அவன்முக
விந்தையைக் கண்டிருந்தேன்!
முருகன் விழியழகை - மொழிந்திட
முத்தமிழ் பற்றவில்லை
சிறுவன் இதழ்விரித்து - நோக்கியே
சிரித்தது மறக்கவில்லை!
சிற்சில பொற்கணம்தான் - பின்னரந்தச்
சின்னவன் கண்மறைத்தான்!
பெற்றதை கைத்தொலைத்து - அழுமொரு
பேதையைப் போல்தவித்தேன்!
சுற்றிச் சுற்றிவிழித்தேன் - கண்ணீரின்
துளிகளிலே நனைந்தேன்
குற்றம் புரிந்ததுபோல் - உள்ளெலாம்
குமைந்து பரிதவித்தேன்!
முன்னால் அமர்ந்திருந்த - இசைக்கவி
முல்லை மலர்கொடுத்து
பன்னரும் வெண்பாவில் - அந்தாதி
பாடெனச் சொல்கொடுத்தார்!
தொடக்கம் உலகெனும்சொல் - அதிலே
தொடங்கிய தென்னுலகம்
வடபழநிக் கோயில் - அதன்பின்
வாழிடம் ஆனதம்மா!!
-விவேக்பாரதி
09.08.2024
08.15 PM
Comments
Post a Comment